மறைந்த பிறகும்.. "டெல்லி அரசியலை" தன்னை சுற்றி சுழல வைத்த கருணாநிதி.. காலையிலேயே ஒரு மேஜிக்!
டெல்லி: மறைந்த பிறகும் தேசிய அளவில் பல கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து விட்டார் கருணாநிதி என்று சிலாகித்து வருகிறார்கள் திமுகவினர்.
கருணாநிதி வாழும் காலம் வரை, தமிழக அரசியல் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் மையப்புள்ளியாக இருந்து வந்தார். அவரைச் சுற்றியே அரசியல் களம் நகரும் வகையில் பார்த்துக் கொள்வார்.
எனவேதான், தேசிய தலைவர்கள் பலரும் கருணாநிதியோடு நட்புறவை கொண்டிருந்தனர். சென்னை வந்தால் கருணாநிதியை அவர்கள் சந்திக்காமல் செல்வது இல்லை.

கருணாநிதி இல்லம் வந்த தலைவர்கள்
அவ்வளவு ஏன்.. எதிர் எதிர் கூட்டணியில் இருந்தபோது கூட பிரதமர் மோடி, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் சென்று நலம் விசாரித்து சென்றதை யாரும் மறந்திருக்க முடியாது. 1999ம் ஆண்டு அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வாபஸ் வாங்கியதால் அரசு கவிழ்ந்தது. ஆனால், அதன்பிறகு, பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். பல கட்சி கூட்டணியை கொண்ட அந்த ஆட்சியில் அனைத்து கட்சிகளோடும் ஒருங்கிணைந்து செல்வதில் கருணாநிதி முக்கிய பங்காற்றினார்.

நேரில் சென்று சந்திப்பு
மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலும் திமுக தொடர்ந்து இடம் பெற்றது. பல கட்சி தலைவர்களும் கருணாநிதியை சுற்றி இயங்கினர். குடியரசு தலைவர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எந்த கூட்டணியாக இருந்தாலும் கருணாநிதியின் ஆதரவை கேட்டு நேரில் வந்து வலியுறுத்த தவறியதில்லை. ஆட்சியில் இல்லா விட்டாலும், இருந்தாலும், கருணாநிதியை சுற்றி அரசியல் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் வாழ்ந்த போது மட்டுமல்ல, மறைந்த பிறகும் கருணாநிதியை சுற்றி அரசியல் வலம் வருகிறது.

கருணாநிதி நினைவு தினம்
இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினமாகும். இதையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பிறகு கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் மரியாதை செலுத்தினார். டெல்லியிலும் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. டெல்லியில், திமுக ராஜ்யசபா குழுத் தலைவர் திருச்சி சிவா இல்லத்தில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இடதுசாரிகள், காங்கிரஸ்
மூத்த இடதுசாரி தலைவர்களான பிருந்தா காரத், டி.ராஜா உள்ளிட்டோர் கருணாநிதி உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரும் கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அது மட்டுமல்ல, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயக கட்சி என பல கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் பேச்சு
இதன்பிறகு அனைத்து தலைவர்களும் அங்கேயிருந்த வட்ட மேஜையை சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கருணாநிதி உயிரோடு இருந்தபோது பல கட்சி தலைவர்களை ஒன்றிணைத்து கூட்டணி ஆட்சிகளுக்கு அடிகோலியவர். அவர் மறைந்த பிறகும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த இத்தனை தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி அரசியல் பற்றி பேசியிருப்பது சிலாகிக்க வைக்கிறது என்று திமுகவினர் கூறுகிறார்கள்.
Recommended Video

எதிர்க்கட்சிகள் கூட்டணி
மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டுமென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி, அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் கருணாநிதி நினைவு தினத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி நினைவு தினத்தன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்துவது கடந்த காலங்களிலும் வழக்கம்தான் என்றபோதிலும், இப்போதைய அரசியல் சூழ்நிலையில், அதுவும் குறிப்பாக பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க முயற்சிகள் நடக்கும் நிலையில், எதிர்கட்சி தலைவர்கள் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு ஒரே இடத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருப்பது தான் இப்போது பேசு பொருளாக உள்ளது.












Click it and Unblock the Notifications