கரூர் கூட்ட நெரிசல்: அலட்சியமே காரணம்.. சிபிஐக்கு மாற்றுங்க! பாஜக உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனு
டெல்லி: கரூர் சம்பவ உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் தாக்கல் செய்த இந்த மனுவை விரைவாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம். கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய அளவிலான பாதுகாப்பை அரசு வழங்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் கடந்த மாதம் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கரூர் கூட்ட நெரிசல்
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், கரூர் நகர செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவான புஸ்ஸி ஆனந்த்
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாலர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவு ஆகினர். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால், ஒருவாரத்திற்கும் மேலாகியும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தரப்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இது ஒருபக்கம் இருக்க, கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழு கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, கரூர் சம்பவ உயிரிழப்பு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை வருகிறது
பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் தாக்கல் செய்த இந்த மனுவை விரைவாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசு நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம். கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய அளவிலான பாதுகாப்பை அரசு வழங்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் எனத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications