ராகுல் காந்திக்கு ஆதரவாக களமிறங்கிய தெலங்கானா முதல்வர் கேசிஆர்! அசாம் முதல்வரை நீக்க வலியுறுத்தல்
டெல்லி: ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அசாம் முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தெலங்கானா முதல்வர் கேசிஆர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச். 10ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட்டில் ஆட்சியைப் பிடிக்க ஒரு கட்சி 36இல் இடங்களில் வெல்ல வேண்டும். தற்போது அங்கு பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி கோட்டையை உடைக்க தயார்! மோடியை ஆட்சியிலிருந்து விரட்டியடிப்போம்.. தெலங்கானா முதல்வர் கேசிஆர்
சர்ச்சை கருத்து
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பாஜகவுக்கு ஆதரவாக உத்தரகண்ட்டில் பிரசாரம் செய்து வருகிறார். பாகிஸ்தான் எல்லையில் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆப்ரேஷனுக்கு ஆதாரம் கேட்ட ராகுல் காந்தியை ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையாகத் தாக்கி பேசினார். "நீங்கள் உண்மையிலேயே ராஜீவ் காந்தியின் மகனா இல்லையா? என்று எங்களாலும் கேட்க முடியும். ஆனால் நாங்கள் எப்போதாவது அப்படி கேட்டுள்ளோமா" என்று அவர் பேசினார். இந்த பேச்சு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராகுல் ஆதரவாக கேசிஆர்
ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அசாமில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தற்போது தெலங்கானா முதல்வர் கேசிஆரும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஹிமந்தா பிஸ்வா சர்மாவை அசாம் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீக்க வேண்டும்
இது தொடர்பாக ராய்கிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், "பிரதமர் அவரை (ஹிமந்தா பிஸ்வா சர்மா) உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஒரு முதல்வர் இப்படிப் பேசலாமா? அனைவரது பேச்சுக்கும் வரம்புகள் உள்ளன. எதற்கு இப்படி ஒரு திமிர்? இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். இது தான் பாஜகவின் கலாசாரமா? இதைத் தான் இந்து தர்மமும் இந்திய கலாசாரமும் சொல்லித் தருகிறதா? ஒரு இந்தியனாக நான் கேட்கிறேன். அவரது பேச்சைக் கேட்கவே கேவலமாக இருந்தது. இது போன்ற பேச்சுக்கள் நாட்டுக்கு நல்லதல்ல"என்று அவர் கடுமையாகச் சாடி பேசினார்.
காங்கிரஸ்
அதேபோல காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் சங்கமான NSUI அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து NSUI அமைப்பின் தேசிய செயலாளர் நிதிஷ் கவுர் கூறுகையில், "அது வருந்தத்தக்கக் கருத்துகள். இது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை அவமதிக்கும் செயல். உயர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு இதுபோன்ற கருத்து தெரிவிப்பது அழகல்ல. இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.