30 விநாடிகள் குலுங்கிய கட்டிடங்கள்.. கொல்கத்தாவில் நிலநடுக்கத்தின் தாக்கம்! மக்கள் பீதி
டெல்லி: வங்கதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், கொல்கத்தாவில் எதிரொலித்தது. கொல்கத்தாவில் கட்டிடங்கள் 30 விநாடிகள் வரை குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
வங்கதேசத்தின் நர்சிங்டியில் இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொல்கத்தாவில் எதிரொலித்தது. இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நல்வாய்ப்பாக நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி, வங்கதேசத்தின் நர்சிங்டிக்கு தெற்கு-தென்மேற்கே 13 கி.மீ. தொலைவில் காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ஆழம் 10 கி.மீ. ஆகப் பதிவு செய்யப்பட்டது. வங்கதேசத் தலைநகர் டாக்காவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. திரிபுராவின் தர்மநகர், மேகாலயாவின் துரா மற்றும் சிரபுஞ்சி, மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் பரவலாக இருந்தது.
முன்னதாக இன்று காலை பாகிஸ்தானிலும் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் 135 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications