இந்திய சீன எல்லையில்.. முக்கிய பகுதியிலிருந்து திரும்பப் பெறப்படும் படைகள்.. திடீர் திருப்பம் எப்படி
டெல்லி: இந்தியா சீன எல்லை சிக்கலைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கிழக்கு லடாக்கின் கோக்ரா ஹைட்ஸ் பகுதியில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இரு நாட்டு ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளன.
எல்லைப் பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது.
இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!
அதிலும் குறிப்பாக கல்வான் மோதலுக்குப் பிறகு எல்லையில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இந்தியாவும் சீனாவும் எல்லையில் அதிகப்படியான வீரர்கள் குவித்து வருகின்றனர்.
12ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இதனால், எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எல்லையில் மீண்டும் அமைதியைக் கொண்டு வர இரு நாட்டு ராணுவமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமை (ஜூலை 31) இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் 12ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். சுமார் 9 மணி நேரம் வரை நடந்த இந்த மீட்டிங்கில் பல முக்கிய விஷயங்கள் விவதாகிகப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோக்ரா ஹைட்ஸ்
இந்தச் சூழலில் இரு நாட்டு எல்லையில் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் கோக்ரா ஹைட்ஸ் பகுதியில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இரு நாட்டு ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ளன. கடந்த சனிக்கிழமை (ஜூலை 31) நடைபெற்ற 12ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எல்லையில் மீண்டும் அமைதி திரும்புவதில் இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முக்கிய முடிவு
ஏனென்றால் இதற்கு முன், வீரர்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கை சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தான் நடந்தது. அப்போது பாங்கோங் ஏரியில் இருந்த படைகளை இரு நாட்டு ராணுவங்களும் விலக்கிக் கொண்டன. அப்போதிலிருந்தே கோக்ரா ஹைட்ஸில் இருந்து வீரர்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக இரு நாட்டு ராணுவமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறியிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை தீவிரம்
கடந்த ஜூலை 31ஆம் தேதி நடந்த மீட்டிங்கில் இந்தியா-சீனா எல்லையில் மேற்கு பகுதிகளில் இருக்கும் வீரர்களை விலகிக்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மீட்டிங் தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள ஒப்பந்தங்களுக்கு ஏற்ப மீதமுள்ள இடங்களில் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இடைப்பட்ட காலத்தில் எல்லையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் மேற்கு பகுதிகளில் அமைதியைக் கூட்டாகப் பராமரிக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன" என்றார்.
கல்வான் மோதல் வீடியோ
முன்னதாக, கடந்த ஆண்டு கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சீன ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதில் ராணுவ கூடாரம் ஒன்றைச் சிலர் நீக்க முயல்வதும் அப்போது சீன ராணுவத்தினர் அவர்களுடன் மோதுவதும் பதிவாகியுள்ளது. கல்வான் நதி அருகே இந்தியா ராணுவத்தை நோக்கி கற்களை வீசுவது போலவும் அந்த வீடியோவில் உள்ளது. மேலும், காயமடைந்த வீரர்களைக் குளிர்ச்சியான நீர் நிறைந்த கல்வான் நதியில் சீன ராணுவம் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்வது போன்ற காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.