"வெல்கம் சிராக்.." அடுத்தடுத்த நாளில் ஆட்டத்தை ஆரம்பித்த லாலு பிரசாத் யாதவ்! மிரண்டு பார்க்கும் பாஜக
டெல்லி: பீகார் அரசியலில் ஒரு திருப்பமாக லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் , ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ்.
டெல்லியில் நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை, லாலு பிரசாத் யாதவ் சந்தித்து பேசிய நிலையில் சிராக் பாஸ்வானுக்கு அவர் விடுத்துள்ள அழைப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அரசியல் சாணக்கியராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்று கூறுகிறார்கள் பீஹார் அரசியல் பார்வையாளர்கள்.
நவீன் பட்நாயக் - இந்திய ஹாக்கியின் மறுமலர்ச்சிக்கு பின்னால் உள்ள மனிதர்!
ஊழல் வழக்குகள்
ஊழல் வழக்குகள் பல லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. இப்படியான ஒரு வழக்கில் சிறையில் அடைபட்டு இருந்த லாலு பிரசாத் யாதவ் கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில், பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அவர் அரசியலுக்கு வந்த பிறகு பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யாத தேர்தல் என்றால் அது கடந்த சட்டசபைத் தேர்தல்தான்.
பீகார் தேர்தல்
இருப்பினும், லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவால் வழிநடத்தப்பட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, ஆளும் பாஜக மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு வலுவான போட்டியாக மாறியது. தேர்தல் முடிவுகளின் போது யார் வெற்றி பெறுவார் என்பது கணிப்பதற்கு சிரமமாக இருந்தது. இருப்பினும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
லாலு பிரசாத் அதிரடிகள்
இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில், காங்கிரஸ் இருந்தது. காங்கிரஸ் பல இடங்களில் தோற்றதால்தான் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாத அளவு பின்னடைவு ஏற்பட்டது என்பதும் முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சம் . இந்த நிலையில்தான் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த லாலு பிரசாத் யாதவ் தனது அதிரடிகளை ஆரம்பித்துள்ளார்.
முலாயம் சிங் யாதவ், சரத் பவாருடன் சந்திப்பு
கட்சி தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர் நேரலையில் பேசி புத்துணர்ச்சி ஏற்படுத்தினார் . இந்த நிலையில் நேற்று டெல்லியில் முலாயம் சிங் யாதவை, லாலு பிரசாத் யாதவ் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இன்று காலை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்திய அரசியலின் மிக மூத்த தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்துள்ளார், மற்றொரு மூத்த அரசியல் தலைவரான லாலு பிரசாத் யாதவ். இது பாஜக தரப்பில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
சிராக் பாஸ்வானுடன் இணைந்து செல்ல விருப்பம்
இந்த நிலையில்தான் இன்று செய்தி ஏஜென்சி ஒன்றிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் , தேஜஸ்வி யாதவ், சிராக் பாஸ்வான் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். லோக் ஜன சக்தி கட்சியில் உட்கட்சி குழப்பங்களில் இருக்கலாம். ஆனாலும் சிராக் பாஸ்வான்தான் அந்த கட்சியின் தலைவர் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
லோக் ஜன சக்தி கட்சிக்குள் பிளவு
பீகார் சட்டசபை தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவு அளித்தாலும் கூட ஐக்கிய ஜனதா தளம் கட்சியை எதிர்த்தது லோக் ஜன சக்தி கட்சி. இதனால் தனித்து போட்டியிட்டது. வாக்குகள் சிதறின . நிதிஷ்குமார் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்காமல் இருப்பதை தடுப்பதற்காக பாஸ்வான் கட்சியை பாஜக பயன்படுத்திக் கொண்டது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால் இப்போது லோக் ஜனசக்தி கட்சிக்குள் இரு பிரிவு ஏற்பட்டிருக்கிறது.
ராம் விலாஸ் பாஸ்வான் மகன்
மோடி அரசில் மத்திய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சிராக் பாஸ்வான் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ஆனார். ஆனால் அவரது சித்தப்பா பசுபதி பராஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலான எம்பிக்கள் சிலர் நிதிஷ் குமார் கட்சிக்கு தாவிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிராக் பாஸ்வான், மாநிலம் முழுக்க யாத்திரை நடத்தி ஆதரவை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
வலை வீசும் லாலு
இப்படியாக பீகார் அரசியலில் ஒரு மூன்றாவது சக்தியாக இருக்கக்கூடிய லோக் ஜனசக்தி கட்சியை தங்களோடு கைகோர்க்க வைக்க லாலு பிரசாத் யாதவ் முயற்சி எடுத்திருப்பது இந்த பேட்டியின் மூலமாக உறுதியாக தெரிகிறது . சித்தப்பாவோடு மோதல் இருக்கும் நிலையில் தன்னை லோக் ஜன சக்தி தலைவர் என லாலு அங்கீகரித்திருப்பது கண்டிப்பாக சிராக் பாஸ்வானுக்கு பெரும் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கும்.இதன் மூலம் லாலு மீது சிராக்கிற்கு தனி மரியாதை வந்திருக்கும். இதைத்தான் லாலுவும் விரும்புகிறார். அதாவது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்.
லாலு பிரசாத் யாதவ் அடுத்தடுத்த சந்திப்புகள்
முலாயம் சிங், சரத்பவார் ஆகிய தலைவர்களை சந்தித்துப் பேசிய கையோடு இப்படி ஒரு வார்த்தையை லாலு பிரசாத் யாதவ் கூறியிருப்பதால் பெரிய கட்சி அல்லது சிறிய கட்சி என்ற எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை ஒன்றிணைக்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் முயற்சி எடுத்து வருவதாக கண்கூடாக தெரிகிறது. இருப்பினும் லாலு பிரசாத் யாதவ் இதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
பாஜக ஏமாற்றி பெற்ற வெற்றி
முலாயம் சிங் யாதவை நேற்று சந்தித்து எதைப் பற்றி பேசினீர்கள் என்ற நிருபரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள லாலு பிரசாத் யாதவ், நாட்டிலுள்ள மிக மூத்த சமூகநீதிக்கான அரசியல்வாதி முலாயம் சிங். அவரும் சரி , நானும் சரி, சரத்பவார் ஆகிய மூன்று பேருமே நீண்ட காலமாக சமூக நீதிக்காக குரல் கொடுத்து வந்துள்ளோம். எனவே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று விளக்கமளித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ். அதேநேரம், பாஜக கூட்டணி 10, 15 ஓட்டுகளில்தான் பீகாரில் வெற்றி பெற்றது.. தேஜஸ்வி யாதவ் தனியாக ஆளும் அரசுக்கு எதிராக களமாடினார். எனவே எப்படியோ ஏமாற்றிதான் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்க முடிந்தது என்று தாக்கியுள்ளார் லாலு பிரசாத் யாதவ்.