நடிகர் சல்மான் கானை பண்ணை வீட்டில் வைத்து கொல்ல சதி.. பின்னணியில் பிரபல நிழல் உலக தாதா! பகீர் தகவல்
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை மகாராஷ்டிராவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்ய சதி நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது
பாலிவுட் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். 58 வயதான சல்மான் கான் இப்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே சல்மான் கான் குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை மகாராஷ்டிராவின் பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே வைத்து கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளன.
என்ன நடந்தது: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கேங் இதன் பின்னணியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பண்ணை வீட்டில் இருந்து வெளியே வரும் போது அவரது காரை நிறுத்தி ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பன்வெல் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அஜய் காஷ்யப் என்ற தனஞ்சய் தப்சிங், நஹ்வி என்கிற கௌரவ் பாட்டியா, வாசிம் சிக்னா என்ற வாஸ்பி கான் மற்றும் ஜாவேத் கான் என்கிற ரிஸ்வான் கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நான்கு பேரும் சல்மான் கானின் பண்ணை வீடு மற்றும் அவரது படப்பிடிப்பு தளங்களில் சுற்றி நோட்டம் விட்டு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து அதிகாரிகள் மொபைல்களை கைப்பற்றினர். அதை ஆய்வு செய்த போது சல்மான் கானை ஏகே 47 துப்பாக்கியால் சுடுவது மட்டுமின்றி, மற்ற ஆயுதங்களாலும் தாக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்துள்ளது தெரிய வந்தது.
பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கிகள்: கைது செய்யப்பட்ட அஜய் காஷ்யப், பாகிஸ்தானில் உள்ள டோகா என்ற ஆயுத வியாபாரியைத் தொடர்பு கொண்டு அவரிடம் இருந்து M16, AK-47 மற்றும் AK-92 ரக துப்பாக்கிகளை வாங்க இருந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக பன்வெல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காஷ்யப் மொபைலில் இருந்து மீட்கப்பட்ட ஒரு வீடியோவில் அவர் தனது கூட்டாளியுடன் சல்மான் கானை தாக்குவது குறித்துப் பேசுகிறார். அதில் அவரது கூட்டாளி, "ஆயுதங்கள் கிடைத்தவுடன் சல்மான் கானுக்கு பாடம் கற்பிக்கப்படும். இதற்கான தொகை கனடாவில் இருந்து (பிரபல ரவுடி) கோல்டி ப்ரார் மூலம் கிடைக்கும்" என்கிறார்.
நிழல் உலக தாதா: நிழல் உலக தாதாக்கள் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோர் தான் சல்மான் கானை கொல்ல வேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளனர். சல்மான் கானை கொன்றால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு பெரும் தொகையைக் கொடுக்க இவர்கள் தயாராக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது..
மும்பை சம்பவம்: முன்னதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இப்போது இரண்டு மாதத்திற்குள் மீண்டும் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.
மும்பையில் நடந்த துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகியோரை போலீசார் குஜராத்தில் வைத்து கைது செய்தனர்.. இதில் மூன்றாவது குற்றவாளியான அனுஜ் தபன், பஞ்சாபில் ஏப்ரல் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.. இந்த விவகாரத்தில் கைதான மற்றொரு நபர் மே 1ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைதானவர்கள் மீது மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திலும் லாரன்ஸ் பிஷ்னோயின் கேங் தான் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications