3ஆம் அலையில் குழந்தைகளுக்கு கொரோனா அதிகரிக்கலாம்.. சிறார்களுக்கு எந்த தடுப்பூசி சிறந்தது?முழு விவரம்
டெல்லி: கொரோனா 3ஆம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதற்குள் சிறார்களுக்குச் செலுத்த ஏதுவாக குறைந்தபட்சம் 3 தடுப்பூசிகள் தயார் நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலையின் தீவிர தன்மை குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பொதுவாக முதியவர்களே அதிகம் தாக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகள் மத்தியில் கொரோனா தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.
கொரோனா மட்டுமின்றி கருப்பு பூஞ்சை பாதிப்புகளும்கூட சிறார்கள் மத்தியில் கண்டறியப்பட்டது. தற்போதுவரை நாட்டில் சிறார்களுக்கு எந்தத் தடுப்பூசியும் போட அனுமதி இல்லை என்பதால் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
சவுமியா சாமிநாதன் தகவல்
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சாமிநாதன் கூறுகையில், சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்தாண்டு கிடைப்பது கடினம். அதுவரை பள்ளிகளைத் திறக்காமலும் இருக்க முடியாது. எனவே, தற்போதைய சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிகளவில் தடுப்பூசிகளைப் போடுவதே ஒரு தீர்வாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சிறார்களுக்குத் தடுப்பூசி பணிகள்
மேலும், கொரோனா 3ஆம் அலையில் சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்ற தகவலும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சில நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி பணிகளை தொடங்கியுள்ளன.
சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு
தற்போது வரை சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட பெரும்பாலும் அது லேசான கொரோனா பாதிப்பாகவே இருக்கிறது. அவர்களுக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை. ஆனால் கொரோனா 3ஆம் அலை ஏற்படும்பட்சத்தில் அப்போதும் நிலைமை இப்படியே இருக்கும் என உறுதியாகக் கூறிவிட முடியாது.
சிறார்களுக்குத் தடுப்பூசி
இந்தியாவில் சிறார்களுக்குத் தடுப்பூசி வழங்கத் திட்டம் ஒன்றை வகுக்கத் தொடங்க வேண்டும் என கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் வி கே பால் தெரிவித்துள்ளார். நமது குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க அது மட்டுமே ஒரு வழி. இந்தியாவில் முதலில் சிறார்களுக்கு எந்தத் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்துப் பார்க்கலாம்.
கோவாக்சின், ஜைடஸ் காடிலா
இந்தியாவில் 2 முதல் 18 வயது சிறார்களுக்குத் தடுப்பூசி சோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் 2 -18 வயது சிறார்களிடம் கோவாக்சின் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசியின் சோதனை தற்போது 12-18 வயதுடைய சிறார்கள் மத்தியில் தொடங்கப்பட்டுள்ளது. ஜைடஸ் காடிலா நிறுவனமும் இன்னும் 2 வாரங்களில் தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைசர் தடுப்பூசி
இந்தியாவில் பைசர் தடுப்பூசிக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பைசருக்கு சட்ட பாதுகாப்பை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைசர் தடுப்பூசி பெரியவர்களுக்கு மட்டுமில்லை சிறார்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Array
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சோதனை இன்னும் சிறார்கள் மத்தியில் தொடங்கப்படவில்லை. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் சிறார்கள் மத்தியில் சோதனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறார்களின் வயது, உயரம், எடை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு டோஸ்கள் அளிக்கப்படும் என ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மற்றொரு தடுப்பூசியான மாடர்னா 12-17 வயதுள்ள சிறார்களுக்கு நல்ல பலன் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடர்னா தடுப்பூசியால் சிறார்களுக்கு எவ்வித மோசமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 தடுப்பூசிகள்
இருப்பினும், அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டிலும் மாடர்னா தடுப்பூசி சிறார்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கோவாக்சின், பைசர், ஜைடஸ் காடிலா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் சிறார்கள் மத்தியில் பயன்படுத்தவும் அனுமதி கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.