கேள்வி கேட்க லஞ்சம்- எம்பி பதவி பறிப்பு- மஹூவா மொய்த்ரா வழக்கை ஜன.3-க்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய புகாரில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் மஹூவா மொய்த்ரா (மஹுவா மொய்த்ரா) தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஜனவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பாஜகவின் எம்.பி. வினோத் குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு அல்லது நன்னடத்தை குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் கடந்த மாதம் அறிக்கையை நன்னடத்தைக் குழு வெளியிட்டிருந்தது.

மஹூவா மொய்த்ரா மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையில் அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. நன்னடத்தை குழுவில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது.
இந்த நிலையில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை லோக்சபாவில் நன்னடத்தை குழு தலைவரான பாஜகவின் வினோத் குமார் சோன்கர் கடந்த 8-ந் தேதி தாக்கல் செய்தார். இதனால் லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தி மஹூவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
தமது எம்பி பதவி பறிப்புக்கு எதிராக மஹூவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் மஹூவா மொய்த்ரா தரப்பு உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியிருந்தது. மஹூவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணை ஜனவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications