இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை.. பட்னாவிஸ், அஜித் பவாருக்கு நோட்டீஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
மகாராஷ்டிராவில் பாஜக கட்சி இன்னும் 24 மணி நேரத்தில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித் பவாரும் விளக்கம் அளிக்க வேண்டும், நாளை காலை இரண்டு கடிதங்களை இது தொடர்பாக அளிக்க வேண்டும் என்று இன்று நடந்த அவசர வழக்கு விசாரணையில் உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை.
மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பங்கள், மாற்றங்கள் நடந்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.
சரத் பவரின் அண்ணன் மகனான இவர் பாஜக உடன் கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தார். இதனால் மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று அதிகாலை திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டு, முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.
மாற்றம் நடந்தது
அதிகாலை 5.30 மணிக்கு இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது. இந்த நிலையில் ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா ரிட் மனு தாக்கல் செய்ய தாக்கல் செய்தது. மேலும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இணைந்து இதில் வழக்கு பதிவு செய்தது.
பாஜக அரசு
24 மணி நேரத்துக்குள் சட்டசபையில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்தன. இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் என்வி ரமணா, அசோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
காங்கிரஸ் எப்படி
இதில் சிவசேனா - காங். - என்சிபி சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி உள்ளனர். அதேபோல் மகாராஷ்டிரா அரசு சார்பாக சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தார், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி உள்ளனர்.
சிவசேனை கூட்டணி
இந்த வழக்கில் சிவசேனா கூட்டணி தனது வாதத்தில், பாஜக ஏற்கனவே ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிவிட்டது. ஆட்சியை அமைக்க எங்களுக்கு எம்எல்ஏக்கள் இல்லை என்று கூறிவிட்டது. ஆனால் அதையும் மீறி பாஜகவை ஆட்சி அமைக்க வைத்தது ஆளுநர் செய்த தவறு.
குதிரை பேரம்
இது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும். இதை தடுக்கும் வகையில் நாளையே உடனடியாக அவசரமாக சட்டசபையை கூட்டி பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் . எங்கள் கூட்டணிக்குத்தான் எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. பாஜகவிடம் 40 எம்எல்ஏக்கள் குறைவாக இருக்கிறது.
ஆனால் நவம்பர்
ஆனால் அவர்களுக்கு ஆளுநர் நவம்பர் 30ம் தேதி வரை நேரம் கொடுத்துள்ளார். அது தவறு. அதனால் உடனடியாக குதிரை பேரத்தை தடுக்கும் வகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
பக்கம் நியாயம்
இதற்கு அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ஒரு பக்கம் நீங்கள் அரசு அமையவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.இன்னொரு பக்கம் அரசு அமைந்த முறை சரியில்லை என்கிறீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் எதுவும் செய்யவில்லை. அதனால் கவர்னர் ஆட்சி தன்னுடைய முடிவை எடுத்தார்.
நேரம் தந்தார்
உங்களுக்கு ஆளுநர் நேரம் கொடுத்தார்: நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை.இதில் ஆளுநர் எங்கும் அவசரப்படவில்லை: எல்லோருக்கும் நேரம் கொடுத்தார். ஆளுநர் முதல்வரை தேர்வு செய்யலாம்: அதை விசாரிக்க முடியாது.சட்டவிதி 361படி ஆளுநரும், குடியரசுத் தலைவர் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை, என்றார்.
என்ன உத்தரவு
இதையடுத்து உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித் பவாரும் விளக்கம் அளிக்க வேண்டும், நாளை காலை இரண்டு கடிதங்களை இது தொடர்பாக அளிக்க வேண்டும் . எப்படி ஆட்சி அமைத்தார்கள், எப்படி மெஜாரிட்டி காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள் என்று நிரூபிக்க வேண்டும்என்று இன்று நடந்த அவசர வழக்கு விசாரணையில் உத்தரவிட்டுள்ளது.
கடும் கோபம்
இதில் ஆளுநரின் முடிவு சட்டத்திற்கு புறம்பானது. அதனால் இதை அரசு பதில் தர வேண்டும். நாளை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படுமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை.இதனால் நாளை இந்த வழக்கில் க்ளைமேக்ஸ் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.