எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பாஜக சதி.. சஞ்சய் ராவத் கைதுக்கு காங். கார்கே கண்டனம்
டெல்லி: சிவசேனா மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பை கோரகாவ் பகுதி பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி விவகாரத்தில் ரூ.1,034 கோடி நில மோசடி நடந்ததாக சஞ்சய் ராவத் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே சஞ்சய் ராவத்துக்கு மிக நெருக்கமான பிரவீன் ராவத் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான சொத்துகள் பலவற்றையும் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே முடக்கி வைத்திருந்தது.

சஞ்சய் ராவத்துக்கு சம்மன்
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. முதலில் இந்த சம்மனை ஏற்க மறுத்த சஞ்சய் ராவத் பின்னர் விசாரணைக்கு ஆஜரானார். ஆனாலும் அப்போதே சஞ்சய் ராவத் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

சஞ்சய் ராவத் கைது
வழக்கம் போல இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே சஞ்சய் ராவத் விமர்சித்து வந்தார். இந்நிலையில் நேற்றும் பத்ரா சால் நில மோசடி வழக்கில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 9 மணிநேரம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சஞ்சய்ராவத் கைது செய்யப்பட்டார்.

காங். கண்டனம்
இக்கைது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பாஜக விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் பணவீக்க விகிதம், குஜராத் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து எழுப்ப உள்ளோம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி அரசை கவிழ்க்க எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்த ஆபரேஷன் தாமரை குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

நாடாளுமன்றம் முடக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 11 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்துள்ளன. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications