கார்கே - சசி தரூர் நேரடி போட்டி.. ‘ஜி23’ ஆதரவு யாருக்கு? ரேஸில் முந்தும் கார்கே.. என்ன நடக்கும்?
டெல்லி : காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே - சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. கே.என்.திரிபாதி தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதி தாக்கல் செய்த வேட்பு மனு கையெழுத்து பிரச்சினையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜி23 தலைவர்கள் உட்பட பெரும்பாலான மூத்த தலைவர்கள் கார்கேவை முன்மொழிந்து அவரது வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளதால், அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
வரும் 8ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். கார்கே, சசிதரூர் இருவரில் யாருமே வேட்புமனுவை வாபஸ் பெறாத பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.
நாடாளுமன்றம் நடக்கும்போதே எனக்கு அமலாக்கத்துறை சம்மன்: திடுக் தகவலை சொன்ன மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி தொடங்கி செப் 30 வரை நடைபெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பலர் போட்டியிடுவார்கள் என பெயர்கள் அடிபட்ட நிலையில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அக்டோபர் 1-ஆம் தேதியான நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 8-ம் தேதி கடைசி நாளாகும்.
3 பேர்
இந்த தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஜார்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான கே.என்.திரிபாதி ஆகியோர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனு நிராகரிப்பு
அதில் மல்லிகார்ஜூன கார்க்கே போட்டியிட 14 மனுக்களும், சசிதரூருக்கு ஆதரவாக 5 மனுக்களும், திரிபாதி சார்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் கே.என்.திரிபாதி மனுவில் முன்மொழிந்தவரின் கையொப்பம் சரியாக பொருந்தவில்லை. முன்மொழிந்த மற்றொருவரின் கையெழுத்து மீண்டும் மீண்டும் போடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
2 மனுக்கள் ஏற்பு
இந்த நிலையில், வேட்புமனுக்கள் குறித்து ஆய்வு நேற்று நடைபெற்றது. கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனுவை விதிமுறைகளின்படி பூர்த்தி செய்யாததால் கே.என் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவித்தார். அவரது வேட்புமனுத் தாக்கலின் போது மொத்தம் 20 படிவங்கள் பெறப்பட்டன. அவற்றில் நான்கு கையொப்பங்கள் மீண்டும் மீண்டும் போடப்பட்டிருந்ததால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நேரடி போட்டி
தற்போதைய நிலவரப்படி கட்சித்தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மனுவை வாபஸ் பெற இம்மாதம் 8-ஆம் தேதி கடைசி நாள். யாரும் வாபஸ் பெறவில்லை என்றால், அக்டோபர் 17-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றால் 19-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும்.
கார்கே ராஜினாமா
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் மல்லிகார்ஜுன கார்கே தனது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் சிந்தனை அமர்வு கூட்டத்தில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையிலேயே கார்கே ராஜினாமா செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வாய்ப்பு அதிகம்
ஜி23 தலைவர்கள் உட்பட பெரும்பாலான மூத்த தலைவர்கள் கார்கேவை முன்மொழிந்து அவரது வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளதால், அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ள சூழல் உள்ளது. இதனால், சசி தரூர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவாரா அல்லது அக்டோபர் 17ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்குமா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.