போலி இணையதளங்களை நம்பாதீர்.. பாஸ்வேர்டை பகிராதீர்... நீட் மாணவர்களுக்கு எம்சிசி அறிவுரை
டெல்லி : நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் விவரங்களை அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் பகிரவேண்டாம் என மருத்துவக் கவுன்சில் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மருத்துவ கலந்தாய்வுக் குழுவின் (மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி) அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ்
எம்பிபிஎஸ் எனப்படும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டன. மாணவர்களின் தேர்ச்சி, மதிப்பெண் குறித்த விவரங்கள் மாணவர்களின் பதிவு செய்திருந்த மின்னஞ்சலுக்கு தேசிய தேர்வு முகமை (NTA) நேரடியாக அனுப்பி வைத்தது.

மாணவர்கள்
மேலும் மாணவர்கள் நீட் மதிப்பெண் விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வசதியாக https://nta.ac.in என்ற என்டிஏயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில், 8,70,074 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

எப்போது கலந்தாய்வு
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கட்ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளனர். இதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள 15% இடங்களுக்கான கலந்தாய்வ, மருத்துவ ஆலோசனை குழுவும், 85% இடங்களுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் கலந்தாய்வை நடத்துகின்றனர். 2021ம் ஆண்டு படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம்
இந்நிலையில், மருத்துவ ஆலோசனைக் குழு (எம்சிசி) மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கலந்தாய்வுக்கு பங்கேற்க உள்ள மாணவர்கள் தங்கள் விவரங்களை mcc.nic.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இணையதளங்கள் அல்லது முகவர்களை நம்பி தங்கள்து யூசர்நேம் மற்றும் பார்வேர்டுகளை பகிரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி வேண்டாம்
கலந்தாய்வின்போது சேர்க்கை குறித்த செயல்முறைகளை mcc.nic.in இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே கடைப்பிடிக்க வேண்டும். இந்த தகவல்கள் வேறு எந்த இணையதளத்திலும் பகிரப்படவில்லை. மேலும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், mcc.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் திட்டவட்டமாக மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.

தகவல் கொடுங்கள்
ஒருவேளை மோசடியான இணையதளம் அல்லது முகவர்கள் குறித்து மாணவர்களுக்கு தெரிந்தால் உடனடியாக எம்சிசிக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அவ்வாறு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications