கொடுமை.. கொடுமையோ கொடுமை! கோபத்தில் ஆங்கிலேய அதிகாரிக்கு பளார்! இவர்தான் 108 வயதான இமாமுதீன் குரேஷி
டெல்லி: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் ஒருவர் பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஒன்பதாவது முறையாகச் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல மாநிலங்களில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடிகளை ஏற்றினர்.

சுதந்திர தினம்
76ஆவது சுதந்திர தினத்தை இந்தியாவே கோலாகலமாகக் கொண்டாடும் இந்தச் சூழலில் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை நாம் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் சுயநலமற்ற தியாகத்தால் தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது. நாட்டின் விடுதலைக்கு மகாத்மா காந்தி முன்னெடுத்த அகிம்சை போராட்டம் தான் முக்கிய காரணம் என்றாலும், ஒரு புறம் சிலர் ஆயுதம் ஏந்தியும் போராடவே செய்தனர்.

இமாமுதீன் குரேஷி
அகிம்சை முறையில் போராடியவர்களும் சரி ஆயுதம் ஏந்தி போராடியவர்களும் சரி ஆங்கிலேயர்களின் தடிகளுக்கும் தோட்டாக்களுக்கும் ஒருபோதும் பயப்படவில்லை. இவர்கள் ஒவ்வொரு சமயத்திலும் ஆங்கிலேயர்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்தே வந்தனர். இப்படி நாட்டிற்கு மிகவும் போராடியவர்களில் ஒருவர் தான் இமாமுதீன் குரேஷி! ஆங்கிலேயர்களைக் கண்டு இவர் துளியும் அஞ்சாமல் நாட்டிற்காகப் போராடினார்.

108 வயது
இப்போது 108 வயதாகும் இமாமுதீன் குரேஷி, நாடு சுதந்திரம் அடைந்த அந்த நாட்களையும் அப்போது மக்கள் சந்தித்த போராட்டங்களையும் நினைவு கூர்ந்தார். இது தொடர்பாகத் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ஒரு சுவாரசிய சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். ஆகஸ்ட் 1947இல் இந்தியா சுதந்திரம் அடைய இருந்த சமயம் அது. அப்போது நாட்டு மக்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர். பெரியவர்கள் தொடங்கி குழந்தைகள் வரை அனைவரும் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி இருந்தனர்.

பிரிட்டிஷ் அதிகாரி
அப்படித்தான் ஆகஸ்ட் 12ஆம் தேதி, சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு, அக்ராவில் இந்து, முஸ்லிம் சகோதரர்கள் மூவர்ணக் கொடியுடன் பேரணி நடத்தினர். இதைப் பார்த்துக் கோபமடைந்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தினார். அப்பாவி மக்கள் பலரைக் கைதும் செய்தனர். இதைப் பார்த்து இமாமுதீனால் அமைதியாக இருக்க முடியவில்லை. கொதித்து எழுந்த அவர் கோபத்தில் பிரிட்டிஷ் அதிகாரியைத் தாக்கினார்.

தாக்குதல்
கோபத்தில் அந்த பிரிட்டிஷ் அதிகாரியின் கன்னத்தில் பலமுறை அறைந்தார். மேலும், பிரிட்டஷ் போலீசாரை திசைதிருப்பி கைது செய்யப்பட்ட பொதுமக்கள் எஸ்கேப் ஆகவும் அவர் பெரியளவில் உதவியுள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், போலீசார் அவரை தேடி கடும் நடவடிக்கை எடுத்த நிலையில், அவர் தலைமறைவானார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னரே அவர் நாடு திரும்பி உள்ளார்.

போராட்டம்
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரையிலும் கூட அவர்களின் அத்துமீறல் தொடர்ந்ததாக கூறுகிறார் இமாமுதீன்! அந்த காலத்தில் தன்னை போலப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்திற்குக் கடுமையாகப் போராடியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இந்தச் சம்பவம் நடந்த போது தனக்கு 24 வயது தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications