விவசாயிகளுக்கு எதிராக தேசதுரோகம் அல்லது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.. மத்திய அரசு
டெல்லி; மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு எதிராக டெல்லி காவல்துறை தேசத்துரோகம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (உபா) ஆகியவற்றின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஜனவரி 26ம் தேதி (குடியரசு தினம்) அன்று மத்திய அரசின் மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிராக்டர் பேரணி போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கான டிராக்டர்கள் உள்ளே வந்ததால் டெல்லி போலீசார் திணறினர். இந்த சம்பவத்தின் போது டெல்லி போலீசார் மற்றும் விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டது.இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

மே மாதத்தில், இந்த வழக்கில் முக்கிய சதிகாரர்களாக பெயரிடப்பட்ட நடிகர் தீப் சித்து மற்றும் கேங்ஸ்டர்-ஆக்டிவிஸ்ட் லக்கா சித்தனா உட்பட 16 பேர் மீது டெல்லி காவல்துறை 3,224 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தேசத்துரோகம், கலவரம், கொலை முயற்சி, பகைமை மற்றும் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தேசதுரோக சட்டம் அல்லது உபா தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ராஜ்யசபாவில் சிபிஐ கட்சி எம்பி பினோய் விஸ்வாம் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், 2020 முதல் ஜூலை வரை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக 183 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
"டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, தேசத்துரோக விதிகள் அல்லது யுஏபிஏ போன்ற வேறு எந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட எந்த வழக்குகளும் இல்லை" இவ்வாறு உள்துறை அமைச்கம் சார்பில் இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.












Click it and Unblock the Notifications