மன்னிக்க கற்றுக்கொடுத்தவர்...இரக்கமுள்ள கனிவான மனிதர்... தந்தை ராஜிவ் பற்றி ராகுல் உருக்கம்
எனது தந்தை இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர் என்று ராஜிவ்காந்தி பற்றி ராகுல்காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: எனது தந்தை மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தார் என்று ராஜிவ் காந்தி பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி. பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வரும் நிலையில் ராகுல்காந்தி தனது தந்தையின் நினைவு நாளில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜிவ் காந்தி, மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 31ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

ராஜிவ்காந்தி
பாரத ரத்னா விருது பெற்றவரான ராஜிவ் காந்தி நாட்டின் ஆறாவது பிரதமராக பதவி வகித்தவர். ராஜீவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டில் பிரதமராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு 40 வயது என்பதால் இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெருமையை ராஜிவ் காந்தி பெற்றார். தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டது ராஜிவ் காந்தி.

ராஜிவ்காந்தி 31வது நினைவுநாள்
1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த போது மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

நவீன இந்தியாவின் தலைவர்
காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டுவிட்டரில் ராஜிவ் காந்தி பற்றிய நினைவுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். தந்தை ராஜிவ் காந்தி பற்றி அவரது மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது என்று குறிப்பிட்டுள்ளார்.

அற்புதமான தந்தை
அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர், எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை, அவர் மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தார். நான் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன், நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன் என்று ராகுல்காந்தி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை
ராகுல்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பேரறிவாளன் 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததோடு அறவழி போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் ராகுல்காந்தி தனது தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது மன்னிக்கக் கற்றுக்கொடுத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications