கடத்தி வைத்து துன்புறுத்தல்.. கொடுமை.. மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகை
டெல்லி: வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 13 தமிழர்கள் இன்று விமானம் மூலம் இந்தியா திரும்புகின்றனர்.
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் அவர்கள் தற்போது மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
மீதமுள்ள தமிழர்களை மீட்கும் பணியும் விரைந்து நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள பல இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
வந்ததுமே வேலையை ஆரம்பித்த தென்காசி மா.செ.. 26 சென்ட் ரெடி.. 'உதயநிதியை அழைத்து’.. ஓஹோ.. பிரமாண்டம்!
தாய்லாந்தில் வேலை எனக் கூறி..
தாய்லாந்தில் ஐ.டி நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களிடம் ஒரு கும்பல் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளது. இதனை நம்பி ஏராளமான இளைஞர்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்களை அந்த கும்பல் ஏமாற்றி மியான்மர் நாட்டுக்கு கடத்தி சென்றது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களிடம் செல்போன் உள்ளிட்ட அனைத்தையும் அந்த கும்பல் பறித்துக் கொண்டதால் அவர்களால் யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.
மியான்மரில் துன்புறுத்தல்..
மியான்மரின் மியவாடி என்ற பகுதியில் அந்த இளைஞர்களை சிறை வைத்த அந்த கும்பல், அவர்களை வலுக்கட்டாயமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்ததாக கூறப்படுகிறது. 'ஹேக்கிங்' உள்ளிட்ட பணிகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து தாய்லாந்துக்கு சென்ற 13 தமிழர்கள் அண்மையில் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அவர்கள் வீடியோ பதிவாக வெளியிட்டனர். இது பல தெலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டன. இதுபோல 300-க்கும் மேற்பட்டோர் அங்கு பிணைக் கைதிகளாக இருப்பதாக அவர்கள் கூறினர்.
தமிழக அரசு நடவடிக்கை
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, முதல்கட்டமாக தாய்லாந்தில் இருக்கும் 13 தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
தாயகம் திரும்புகின்றனர்..
இந்நிலையில், தாய்லாந்தில் இருக்கும் 13 தமிழர்களை முதல்கட்டமாக மீட்கும் நடவடிக்கையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டது. அதன்படி, தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 13 தமிழர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் இன்று இந்தியா அழைத்து வரப்படவுள்ளனர். இன்று மாலை டெல்லி வரும் அவர்கள், அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, மியான்மரில் சிக்கியுள்ள மற்ற தமிழர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்துள்ளார்.