மாயாவதி ஒரு கறைன்னு ஏன் சொன்னீங்க? பாஜக பெண் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கும் மகளிர் ஆணையம்
டெல்லி:பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை அவதூறாக பேசிய பாஜக பெண் எம்எல்ஏ சாதனாவுக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.
லக்னோவில் நடந்த கூட்டத்தில் முகல்சாரே தொகுதியின் பெண் எம்எல்ஏ சாதனா சிங் பேசினார். அப்போது மாயாவதியை கடுமையான சொற்களாலும், அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும் விமர்சித்தார்.
அவர் பேசியதாவது: பெண் சமூகத்தின் கறை மாயாவதி, அதிகாரத்துக்காக சுய மரியாதையை விற்கிறார்.மாயாவதிக்கு சுயமரியாதை என்பதே கிடையாது. ஏற்கனவே அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்.
மகாபாரதத்தில் திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார்.
சுயமரியாதையை அதிகாரத்துக்காக விற்கத் துணிந்து விட்டா மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை என்று சாதனா சிங் பேசியிருந்தார்.
இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.இதையடுத்து, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துகொண்ட தேசிய மகளிர் ஆணையம், மாயாவதி குறித்து அவதூறாக பேசிய பாஜக பெண் எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ஒரு கட்சியின் தலைவரை ஒரு பெண்ணை பற்றி மற்றொரு பெண் தரக்குறைவாக விமர்சிப்பதை ஏற்க முடியாது, கண்டிக்கத்தக்கது.
எனவே, இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்து கொண்டுள்ளது. பாஜக எம்எல்ஏ சாதனா சிங்குக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று கூறினார்.