நேருதான் காரணம்.. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை தாமதப்படுத்தினார்.. பாஜக பதிலடி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை ஜவஹர்லால் நேருதான் தாமதப்படுத்தினார் என்று பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் வல்லப் வித்யாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ''இந்தியாவின் சமஸ்தானங்களின் இணைப்பு பிரச்சினையை சர்தார் வல்லபாய் படேல் தீர்த்தார். 'ஆனால், ஒருவரால்' காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என்று பேசியிருந்தார்.

சுதந்திரத்துக்கான கனவு
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மறைமுகமாக தாக்கி பிரதமர் மோடி அவ்வாறு பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் கூறியதாவது:- காஷ்மீரை அப்போது ஆட்சி செய்த மகாராஜா ஹரி சிங், இந்தியாவோடு இணைப்பதற்கு தயக்கம் காட்டினார். சுதந்திரத்திற்கான கனவு அப்போது இருந்தது.

கிரண் ரிஜிஜூ ட்விட்
ஆனால், பாகிஸ்தான் ஊடுருவிய போது, இந்தியாவோடு காஷ்மீரை ஹரிசிங் இணைத்தார். நேரு உடனான நட்பு மற்றும் காந்தி மீது அவர் வைத்திருந்த மரியாதை காரணமாக ஷேக் அப்துல்லா ( ஜம்மு காஷ்மீரின் முதல் முதல்வர்) இந்த இணைப்புக்கு ஆதரவு அளித்தார்" என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், ஜெய்ராம் ரமேஷின் இந்த ட்விட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் பதலடி கொடுத்துள்ளார்.

வரலாற்று பொய்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், ''மகாராஜா ஹரிசிங் முதல் முறையாக கடந்த ஜூலை 1947-ஆம் ஆண்டு காஷ்மீர் இணைப்பு தொடர்பாக ஜவஹர்லால் நேருவை அணுகினார். ஆனால், இதை நேரு மறுத்தார். பிற மாநிலங்கள் இணைக்கப்பட்ட போதும் காஷ்மீர் நிராகரிக்கப்பட்டது. நேருவின் சந்தேகத்திற்கு இடமான இந்த பங்கை மறைப்பதற்காக மகராஜா ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க தயக்கம் காட்டினார் என்ற வரலாற்று பொய் நீண்ட காலமாக நிலவி வருகிறது'' என்றார்.

முட்டாள் தனமான செயல்
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக சில தந்திர வேலைகளில் ஜவஹர்லால் நேரு ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய கிரண் ரிஜிஜூ, 'நேருவின் முட்டாள்தனமான செயல்களுக்காக இந்தியா இன்றும் விலை கொடுத்து வருகிறது' எனவும் சாடினார்.












Click it and Unblock the Notifications