அடுத்த 30 ஆண்டு இப்படித்தான்! பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல்! பிரசாந்த் கிஷோர் பரபர கருத்து
டெல்லி:இந்தியாவில் பாஜகவை மையப்படுத்தி தான் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகள் வரை அரசியல் சுழலும். இருப்பினும் உச்சத்தை அடையும்போது நிச்சயம் சரிவு ஏற்படும். இதுதான் விதி. இதற்கு பாஜகவும் விதிவிலக்கல்ல'' என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
2024 மக்களவை தேர்தலையொட்டி பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த மாதம் சில வியூகங்களை வகுத்து கொடுத்தார்.
இதனை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பரிசீலனை செய்தார். மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்தார். இந்நிலையில் தான் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் பரவின. ஆனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை.
குஜராத் தேர்தலிலும் காங்கிரசுக்கு படுதோல்வி காத்திருக்கிறது.. பிரசாந்த் கிஷோர் பரபர கணிப்பு
காங்கிரசுக்கு தோல்வி
இதையடுத்து மே 13 முதல் 15 வரை ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் மாநாடு நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த மாநாடு பற்றி அவர் கருத்து தெரிவித்து இருந்தார். அதாவது, ‛காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் மாநாடு முக்கிய முடிவுகள் எடுப்பதில் தோல்வியடைந்துவிட்டது. இதனால் பழைய நிலையே தொடர்கிறது. குஜராத், இமாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தோல்வி வரையாவது காங்கிரஸ் கட்சிக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
பிரசாந்த் கிஷோர் பேச்சு
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிழ் சார்பில் நடந்த தேசிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் இந்திய அரசியல் பற்றி அவர் பேசினார். அப்போது பாஜக கட்சியை மையமாக வைத்து தான் இன்னும் 30 ஆண்டுகள் இந்திய அரசியல் சுழலும் என கூறியிருந்தார்.இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
விதி இதுதான்
இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது. இதனை யாராலும் மறுக்க முடியாது. எந்தவொரு விஷயம் அல்லது கருத்தியல் அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் சரிவை சந்திக்கும். இதுதான் விதி. எனவே பாஜகவுக்கும் இந்த நிலை ஏற்படும் என பலரும் கருதுகின்றனர். இதனை நானும் ஒப்புக்கொள்கிறேன்.
எளிதில் வலுவிழக்காது
ஆனால் இந்த விஷயம் இப்போது உடனே நடைபெற்றுவிடாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் நடைபெறாது. அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அக்கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது.
பாஜகவை மையப்படுத்தி அரசியல்
இதனால் இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது என நான் கூறவில்லை. ஆனால், அடுத்த 20 - 30 ஆண்டுகள் பாஜகவை மையப்படுத்திதான் இந்திய அரசியல் சுழலும். இன்னும் சரியாக கூற வேண்டுமென்றால் நீங்கள் அடுத்த 20 - 30 வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்க்க வேண்டும். மாறாக அக்கட்சியை உங்களால் புறக்கணிக்க முடியாது. சுதந்திர இந்தியாவில் முதல் 40 ஆண்டுகள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது. இதேபோல் தான் தற்போது பாஜக உள்ளது'' என்றார்.