அதிகரிக்கும் ஓமிக்ரான் கேஸ்கள்.. கேரளாவில் இரவு ஊரடங்கு அமல்.. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை
டெல்லி: கேரளாவில் ஒமிக்ரான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பர் 30 முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் மாதம் முதலில் ஓமிக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா ஒன்று கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பு இதைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
ஓமிக்ரான் பரவல்: 4 பேர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வருகை - 3 நாட்கள் ஆய்வு
இந்த உருமாறிய கொரோனா டெல்டாவை காட்டிலும் 3 மடங்கு வரை வேகமாகப் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பல நாடுகளில் ஓமிக்ரான் கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
ஓமிக்ரான் கேஸ்கள்
இந்தியாவிலும் இந்த ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 578 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் அச்சம் காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் அனுப்பியிருந்தது. அதில் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறும் கூறப்பட்டிருந்தது.
கூடுதல் கட்டுப்பாடுகள்
பெரும்பாலான மாநிலங்களில் ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்குப் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் இரவு ஊரடங்கு
இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில். இப்போது கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் ஒமிக்ரான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பர் 30 முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஓமிக்ரான் கேஸ்கள்
இந்தியாவில் தற்போது வரை 578 ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாகத் தலைநகர் டெல்லியில் 142 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 141 பேருக்கும் கேரளாவில் 57 பேருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத்தில் 49 பேருக்கும் ராஜஸ்தானில் 43 பேருக்கும் ஓமிகன்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.