பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்னென்ன.. சென்னை, சேலம், மதுரைக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த சர்ப்ரைஸ்
டெல்லி: 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தமிழகத்திற்கு அவர் அறிவித்த திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு விவரங்களை பார்ப்போம்.
Recommended Video
சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியாவில் முதல்முறையாக காகிதம் இல்லாமல் பட்ஜெட்டை இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்
தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவான திட்டங்கள், துறைவாரியான நிதிகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றாலும், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்றே சிறப்பு திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
மதுரை -கொல்லம்
தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தொழில் வழித்தடம் போடப்பட உள்ளது. அதாவது மதுரை கொல்லம் இடையே புதிய பொருளாதார மண்டல வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது. இதன்படி தமிழகம் மற்றும் கேரளாவில் ஒருங்கிணைந்த சாலை திட்டமாக இது அமைய உள்ளது. பெங்களூரு - சென்னை அதிவேக நெடுஞ்சாலை அமைக்க ( 278 கி.மீ) நடப்பு நிதி ஆண்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில்
இதேபோல் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப் பணிகளுக்காக 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இத்துடன் நாடு முழுவதும் உள்ள 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தை ஒட்டி உள்ள கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் மெட்ரோ ரயில் பேஸ் 2 வில் செயல்படுத்தப்பட உள்ள 58.19 km பணிக்கு 14788 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம்
சென்னை (தமிழகம்), கொச்சி (கேரளா), விசாகப்பட்டினம் (ஆந்திரா), பிரதீப்(ஒடிசா), பெட்டுகாட்(மேற்கு வங்கம்) உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பாசி
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும்; கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நகரங்களில் எரிவாயு விநியோக குழாய் கட்டமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்கிடையே மிக முக்கியமான சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் இந்த ஆண்டே தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது,