என்ன நடக்கிறது பாஜகவில்?.. மோடி, அமித் ஷாவை கேள்வி கேட்கும் கட்கரி!
பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பேசியுள்ளார்.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு எதிராக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பேசியுள்ளார்.
பாஜக கட்சிக்குள் உருவாகி இருந்த சிறிய பூசல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது. பாஜகவின் தொடர் தேர்தல் தோல்விகளால் தற்போது அந்த கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகி இருக்கிறது.
பாஜகவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு பதிலாக 2019 தேர்தலில் முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தது. தற்போது நிதின் கட்கரியின் செயல்பாடுகளும் கூட அப்படித்தான் இருக்கிறது.
என்ன தகவல்
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விதான் தற்போது மிக முக்கியமான விவாதமாக உருவெடுத்து உள்ளது. மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று சில குரல்கள் எழுந்தது. இவருக்கு ஆர்எஸ்எஸ் தரப்பில் பெரிய ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் வந்தது.
குரல் கொடுத்தார்
அதற்கு ஏற்றபடியே நேற்று முதல்நாள் நிதின் கட்கரி, பிரதமர் மோடியையும், பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவையும் தாக்கும் வகையில் பேசி இருந்தார். வெற்றி என்றால் கட்சியில் சிலர் கொண்டாடுகிறார்கள். தோல்வி என்றால் காணாமல் போய் விடுகிறார்கள். தோல்விக்கு இவர்கள் பொறுப்பேற்பதே இல்லை என்று கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் பேசினார்
இந்த நிலையில் நேற்று பேசிய நிதின் கட்கரி நேரடியாகவே அமித் ஷாவிற்கு எதிராக பேசினார். தேர்தல் தோல்விக்கு கட்சியின் தலைவர்தான் பொறுப்பேற்க வேண்டும். பாஜகவின் எம்.பி, எம்எல்ஏ சரியாக செயலாற்றவில்லை என்றால் அதற்கும் பாஜகவின் தேசிய தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்று நேரடியாக அமித் ஷா குறித்து விமர்சனம் வைத்து இருந்தார்.
மேகதாது அணை விவகாரம்
அது மட்டுமில்லாமல் மேகதாது அணை விவகாரத்திலும் நிதின் கட்கரி, மோடி, அமித் ஷாவின் நிலைப்பாட்டிற்கு எதிராகவே பேசி உள்ளார். மோடியும், அமித் ஷாவும் கர்நாடகாவிற்கு ஆதரவாகவே இத்தனை நாட்கள் நிலைப்பாடு எடுத்து வந்தனர். ஆனால் நிதின் கட்கரி '' தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட கூடாது. அதற்கு அனுமதி அளிக்க மாட்டோம்'' என்று தெரிவித்து இருக்கிறார்.
என்ன நடக்கிறது
இது பாஜக கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று கேள்வியை எழுப்பி உள்ளது. வரிசையாக தினமும் பாஜகவின் இருபெரும் தலைகளுக்கு எதிராக நிதின் கட்கரி பேசுவது ஏன், அடுத்து பாஜகவில் இதனால் என்ன மாற்றம் நடக்க போகிறது என்று கேள்விகள் எழுந்து உள்ளது. முக்கியமாக நிதின் கட்கரியின் இந்த திடீர் விஸ்வரூபத்துக்கு என்ன காரணம் என்ற கேள்வியும் உருவாகி உள்ளது.