2024 லோக்சபா தேர்தல்: பிரதமர் வேட்பாளர் கனவு.. பாஜகவுக்கு நிதிஷ்குமார் குட்பை சொல்வதன் பின்னணி என்ன?
டெல்லி/ பாட்னா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பிரதமர் வேட்பாளராக தாம் முன்னிறுத்தப்படலாம் என்கிற வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் முறிக்க முன்வந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் பாஜக- ஜேடியூ இடையேயான மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக பீகார் சபாநாயகரான பாஜகவின் விஜய்குமார் சின்ஹா, தொடர்ந்து நிதிஷ்குமார் அரசை விமர்சித்து வருகிறார். இதனால் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் நிதிஷ்குமார்.
மேலும் மத்தி அரசியல் ஜேடியூவுக்கு 2 அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பது நிதிஷ்குமாரின் வேண்டுகோள். இதனை பாஜக ஏற்கவே இல்லை. ஒரே ஒரு அமைச்சர் பதவிதான் வழங்கப்படும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. ஜேடியூவில் நிதிஷ்குமாருக்கு எதிரான ஆர்பிசிங் மத்திய அமைச்சராக்கப்பட்டார். இதற்கு பதிலடியாக ஆர்பி சிங்கின் ராஜ்யசபா எம்பி வாய்ப்பை ஜேடியூ மீண்டும் கொடுக்கவில்லை. இந்த அதிருப்தி ஜேடியூவில் இருந்து ஆர்பிசிங் விலகி தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் 2020 சட்டசபை தேர்தலின் போதும் ஜேடியூவுக்கு பெரும் குடைச்சல் கொடுத்தவர் சிராக் பாஸ்வான். இப்போதும் சிராக் பாஸ்வான் தொடர்ந்து ஜேடியூவை விமர்சித்து வருகிறார். ஆனால் சிராக் பாஸ்வானை பாஜக அனைத்து கூட்டங்களிலும் சேர்த்துக் கொள்கிறது. இதுவும் நிதிஷ்குமாரை கடும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
பாஜகவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தூக்கி போடட்டும்-கூட்டணிக்கு நாங்க ரெடி- லாலுவின் ஆர்ஜேடி அதிரடி
இந்த அதிருப்திகளுக்கு அப்பால் நிதிஷ்குமாரின் வியூகம் ஒன்றையும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது 2024 லோக்சபா தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு ஏராளமான தலைவர்கள் ரேஸில் இருக்கின்றனர். இந்த பட்டியலில் தாமும் இடம் பெற வேண்டும் என்பது நிதிஷ்குமாரின் விருப்பமாம். தற்காக இப்போதே பாஜகவுடனான உறவை துண்டித்துக் கொள்வதில் தீவிரமாக இருக்கிறாராம் நிதிஷ்குமார்.
பாஜகவுடனான உறவை துண்டிக்கும் நிதிஷ்குமார், ஆர்ஜேடி-இடதுசாரிகள்-காங்கிரஸ் தயவில் முதல்வராகும் முடிவில் இருக்கிறாராம். இந்த முடிவானது 2024 லோக்சபா தேர்தலின் போது தமக்கு கை கொடுக்கும்; பிரதமர் வேட்பாளராக தமது கனவு நிறைவேறும் என்பதும் நிதிஷ்குமாரின் கணக்காம்.