கொடிய துரோகம்.. பொங்கிய டிஆர் பாலு! நேராக மத்திய அமைச்சரிடம் முறையீடு.. பெரிதாகும் என்எல்சி விவகாரம்
டெல்லி: நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் புதியதாக பணிக்கு சேர்ந்துள்ளவர்களில் தமிழர்கள் யாரும் இல்லாத நிலையில், இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை திமுக எம்.பி டி.ஆர்.பாலு சந்தித்து பேசியுள்ளார்.
மொத்த காலிப்பணியிடங்களான 299 இடங்களுக்கும் தமிழர்கள் தவிர வட இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அதிமுகவினர் வீடுகளில் 3 நாட்கள் தேசியக் கொடி பறக்கட்டும்! எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!
நிலம் தாரை வார்ப்பு
கடந்த 1956ல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் மின்சாரத் தேவைக்காக நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு சுமார் 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் நிலத்தை வழங்கியுள்ளனர். இவர்களின் வாரிசுதாரர்களுக்கு இந்நிறுவனத்தில் பணி கொடுக்கப்படும் என அப்போது வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை தமிழர்கள் தற்காலிக பணியாளர்களாகவும், வட மாநிலத்தவர்கள் நிரந்தர பணியாளர்களாகவும் நியமிக்கப்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கடிதம்
இந்நிலையில், நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு, "என்.எல்.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் திட்டமிட்டு துரோகம் இழைக்கும் கொடிய செயல். ஏற்கெனவே, கடந்த 05.05.2022 அன்று, என்.எல்.சி நிறுவனத்துக்கான பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்கள் தேர்வில், என்.எல்.சி நிறுவன சுரங்கப்பணிகளுக்கு நிலத்தை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கேட் நுழைவுத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பது, அந்தத் தேர்வை எழுதாத தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் செயலாகும் என்பதையும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்கள்.
கண்டனம்
அதற்குப் பின்னரும், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை அடியோடு பிடுங்கி எறியும் செயல்பாட்டில் என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டுவருவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில், தமிழர்கள் தாரை வார்த்த நிலத்தில் இயங்கிவரும் ஒன்றிய அரசின் நிறுவனத்தில், தமிழர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பிட்ட மாநிலத்துக்குத் தன்னியல்பாகக் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பை, ஒன்றிய அரசின் நிறுவனம் திட்டமிட்டே தட்டிப் பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல்.
சந்திப்பு
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு நடைபெறவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். தமிழர்களுக்கே வழங்கப்படும் வகையில், பணி நியமனத்துக்கான தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய அமைச்சரை சந்தித்து இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார். இந்த சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
விநோத விளக்கம்
எம்.பி பாலுவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஆர் பாலு, "வேலைவாய்ப்பு என்பது சமூக நீதியின்படி, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக" கூறினார். இந்த நடைமுறையை பின்பற்றியே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் பதிலளித்ததாகவும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.