உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 29 செல்போன்கள் ஆய்வு-பெகாசஸில் ஒட்டுகேட்டதற்கு ஆதாரம் இல்லை- வல்லுநர் குழு
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 29 செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன; 5 செல்போன்களில் உளவு பார்க்கப்பட்டுள்ளன; ஆனால் பெகாசஸ் மென்பொருள் வழியாக உளவு பார்க்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என வல்லுநர் குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெகாசஸ் என்பது உளவு மென் பொருள். இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் இந்த மென்பொருளை தயாரித்தது. இந்த மென்பொருளை நாடுகளின் அரசுகள், பயங்கரவாதிகளை உளவு பார்க்க பயன்படுத்துகின்றன. இதற்காக இஸ்ரேல் இந்த மென்பொருளை தயாரித்தது.
ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அரசாங்கங்கள், செல்போன்கள் வழியாக உளவு பார்க்க பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தியது அம்பலமானது பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது. நமது இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டு தெரியவந்தது.

மத்திய அரசு மோதல் போக்கு
பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கினர்.மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கில் தொடக்கம் முதலே மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் ஒத்துழைக்க மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தின் கடும் அதிருப்திக்கும் கண்டனத்துக்கும் உள்ளானது மத்திய அரசு.

வல்லுநர் குழு அறிக்கை
பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்தரன் கண்காணிப்பில் பெகாசஸ் உளவு தொடர்பாக விசாரிக்க வல்லுநர் குழு ஒன்று உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் முன்னிலையில் இன்று பெகாசஸ் வழக்கு விசாரணை நடைபெற்றது.

ரகசியங்கள், தனிநபர் தகவல்கள்
இந்த விசாரணையின் போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியதாவது: வல்லுநர் குழுவானது மொத்தம் 3 பாகங்களாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அனைத்து விவரங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது. வல்லுநர் குழு அறிக்கையில் சில பகுதிகள் மிகவும் ரகசியமானவையும் கூட. அதில் தனிநபர் தொடர்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

பெகாசஸ் இல்லை
பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து 29 செல்போன்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் 5 செல்போன்களில்தான் உளவு மென்பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தன. எஞ்சியவற்றில் உளவு மென்பொருட்கள் இல்லை. இருந்த போதும் 5 செல்போன்களில் இருந்தது பெகாசஸ் உளவு மென்பொருள்தானா என்பதை உறுதியாக சொல்லவும் முடியவில்லை. அத்துடன் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒத்துழைக்காத அதே போக்கையும் விசாரணை நடத்திய வல்லுநர் குழுவிடமும் மத்திய அரசு தரப்பு வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார். இவ்வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications