இதுதான் கடைசி தேர்தல்.. இதுக்குப் பிறகு தேர்தலை நடக்காது.. பாஜக எம்பியின் பகீர் பேச்சு
டெல்லி: நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் பெரிய வெற்றியை பெறும். மீண்டும் மோடியே பிரதமர் ஆவார். அதன் பின்னர் இந்தியாவில் தேர்தலே நடைபெறாது. இதுதான் இந்தியாவுக்கான கடைசித் தேர்தல் என்று கூறியிருக்கிறார் சாக்ஷி மகராஜ்.
உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதியின் எம்.பி.யும் பாஜகவை சேர்ந்த சந்நியாசியுமான இவரது உளறல்கள் அவ்வப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம்.
இப்போதைய உளறலை பற்றி பார்ப்பதற்கு முன்னர் அவரது முந்தைய உளறல்களை சற்று திரும்பி பார்க்கலாம். காந்தியைப் போல, அவரை சுட்டுக் கொன்ற கோட்சேவும் தேசப் பற்று மிக்கவர் அவரும் போற்றுதலுக்கு உரியவர் கொண்டாடப் படவேண்டியவர் என்று கூறியிருந்தார். இது நாடாளுமன்றத்தில் கடும் புயலை கிளப்ப மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் அரியதொரு கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
அதாவது நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் இந்துக்கள் அல்ல. 4 மனைவிகள் மூலம் 4 குடும்பங்களையும் அதன் மூலம் 40 குழந்தைகளை பெறும் இஸ்லாமியர்களே காரணம் என்றும் கூறினார். நாடு முழுவதும் இதற்கு கண்டனங்கள் வலுத்தது. சுப்ரமணிய சாமி ஏதாவது கூறினால் அது கட்சியின் கருத்து அல்ல என்று கூறும் தமிழிசை போல இது தங்களது கட்சியின் கருத்து அல்ல என்று ஒதுங்கி கொண்டது பாஜக.
பவன் கல்யாணுடன் கை கோர்த்த இடதுசாரிகள்.. சந்திரபாபுவுக்கு பெரும் நெருக்கடி
அடுத்ததாக இந்து தாய்மார்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர் நீங்கள் குறைந்தது 4 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார். அடுத்ததாக பாலியல் குற்றவாளியும் கொலை குற்றவாளியுமான சிறையில் இருக்கும் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் நிரபராதி அவரை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். டெல்லியில் உள்ள ஜும்மா மசூதி ஏற்கனவே இந்துக் கோயில் இருந்த இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது ஆகவே அதை இடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் இப்படியாக சர்ச்சைகளின் நாயகனாக சாமியார் போர்வையில் வலம்வரும் சாக்ஷி மகராஜ் மீண்டும் சர்ச்சையான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் இதயமே ஜனநாயகம்தான். இந்தியாவின் சிறப்பும் அதுதான். அதாவது மக்களால் ஒரு அரசு தேர்வு செய்யப்பட்டுவிட்டால் அதன் பதவிக்காலம் முடிந்ததும் ஆட்சிக் கட்டிலில் இருப்போர் உடனடியாக விலகி அடுத்தவர்களுக்கு வழி விட்டுவிடுவார்கள். இதனாலேதான் ஊழலில் பெருத்தாலும், பொருளாதார வளர்ச்சியில் சிறுத்தாலும் உலகில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. பாகிஸ்தான் போல இருக்கின்ற ஆட்சியாளர்கள் பதவியை விட்டு விலக மறுத்து ராணுவ ஆட்சியை அமல் படுத்திய வரலாறு ஒருபோதும் இந்தியாவுக்கு கிடையாது. மக்களாட்சியின் மகத்துவத்தை இந்திய அரசியல் தலைவர்கள் இதுவரை கடைபிடித்தே இந்தியாவை வழிநடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்த பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ், இப்போது இந்தியா இருப்பதற்கு காரணமே மோடிதான். 2014 ம் ஆண்டு நாடெங்கும் வீசிய மோடி அலை இப்போது சுனாமியாக மாறியுள்ளது. நடைபெறவுள்ள தேர்தலிலும் பாஜகவே வெல்லும். கடந்த முறை கிடைத்த வெற்றியை காட்டிலும் இந்த முறை சிறப்பான வெற்றியை பெறுவோம் மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது அப்படி மோடி பிரதமர் ஆனால் இந்தியாவுக்கு இதுதான் கடைசி தேர்தல். 2024 ம் ஆண்டு முதல் இந்தியாவில் தேர்தலே இருக்காது என்று கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்து வழக்கம்போல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.