இதே நம்மூராக இருந்தா! சைக்கிள் கேப்பில் லாரியே ஓடிருக்குமே.. ஆனந்த் மகிந்திராவை அசர வைத்த போட்டோ!
டெல்லி: டிராபிக் ஜாமின் போது பெரும்பாலும் எரிச்சலுடனேயே காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். கடி ஜோக் என்ற பெயரில் யாருக்கும் பிடிக்காத ஜாம் எது என்று கேட்டால் கூட டிராபிக் ஜாம் என்பது பதிலாக இருக்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 4,50,000 சாலை விபத்துகள் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவற்றில் 1.50 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துகள் நடப்பதாகவும் ஒவ்வொரு 4 நிமிடங்களில் ஒருவர் இறப்பதாகவும் கூறுகின்றனர்.
பெரும்பாலான சாலை விபத்துகள் அதாவது 60 சதவீத விபத்துகள் அதிக வேகத்தால் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இரண்டு போர்களை கடந்திருக்கிறேன் - முதுகு சில்லிட்டுப் போகும்.. அனுபவம் பகிரும் ஆனந்த் மஹிந்திரா!
ஹெல்மெட்
அது போல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்ட வேண்டும் என விதிகள் இருக்கின்றன. இந்த விதிகள் எல்லாம் டிராபிக்கில் போலீஸாரை பார்க்கும் வரை மட்டும் கடைப்பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அவர்களை கடந்து விட்டால் வழக்கம் போல் தலையில் இருக்கும் ஹெல்மெட் பெட்ரோல் டேங்க் மீது இருக்கும்.
சாலை பாதுகாப்பு வார விழா
சாலை பாதுகாப்பு வார விழா என மோட்டார் வாகன அலுவலகங்களில் விழிப்புணர்வுக்காக கொண்டாடப்படுகிறது. இதில் லைசன்ஸ் எடுக்க வருபவர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் பொதுமக்கள் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
பச்சை விளக்கு
அது போல் பச்சை விளக்கு போட்ட பிறகு சிறிது நேரத்தில் மஞ்சள் விளக்கு போடப்படும். அப்போது வாகனங்கள் தங்கள் வேகத்தை குறைத்து நிற்க வேண்டும். ஏனென்றால் அடுத்தது சிவப்பு விளக்கு போடப்படும் என்று பொருள். ஆனால் மஞ்சள் விளக்கு போட்டாலும் சிக்னலை பைக் ரேஸில் கலந்து கொள்வது போல் வேகமாக கடந்துவிடுகிறோம்.
சிக்னல்
அலுவலக நேரங்களில் சிக்னல்களில் வண்டிகள் வரிசை கட்டி நிற்கும். ஆனால் பொறுமையாக நிற்க முடியாத சிலர் பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையில் ஹாயாக வண்டியை எடுத்துக் கொண்டு முன்னாடி போய் நிற்பார்கள். சாலையோரம் டிராபிக்கில் நடக்க முடியாததால்தான் நடைபாதை அமைத்து அதில் பாதசாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் நம்மாட்களோ அதிலேயே வாகனத்தை ஓட்டிக் கொண்டு முன்னால் செல்ல முண்டியடிப்பர்.
எத்தனை வசை
இப்படியாகத்தான் "டேய் சாவுகிராக்கி, வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா, அறிவு இல்லை? சிக்னல் போட்டிருக்காண்டா வெண்ணெய்... " இப்படி டீசன்ட்டான திட்டுகளும் , கெட்ட வார்த்தைகளும் நிறைய இடங்களில் உபயோகப்படுத்துவதை பார்த்திருப்போம். டிராபிக் ரூல்ஸை மதிக்க வேண்டும் என்றால் அது மிசோரம்தான்பா என சொல்லும் அளவுக்கு இணையதளத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
என்னா அற்புதம்
அந்த புகைப்படத்தில் இரு புறமும் இயங்கக் கூடிய டூ வே சாலை இருக்கிறது. அதில் நடுவில் வெள்ள நிற கோடு உள்ளது. ஒரு பக்கம் நீண்ட வரிசையில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு வாகனம் கூட வெள்ளை கோட்டை தாண்டி செல்லவில்லை. இவர்களுக்கு எத்தனை பொறுமை! எதிர்புறம் சாலை காலியாக இருந்த போதிலும் சிக்னலுக்காக காத்திருக்கிறார்களே தவிர டிராபிக் விதிகளை மீறவில்லை.
நல்ல மெசேஜ்
இந்த புகைப்படத்திற்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கருத்து சொல்லியுள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் என்ன அற்புதமான புகைப்படம் இது! ஒரு வாகனம் கூட வெள்ளை நிற கோட்டை தாண்டி நிற்கவில்லையே! நம் உயிரை காப்பாற்றிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது என்ற நல்லதொரு கருத்தையும் இந்த படம் கூறுகிறதே. விதிகளை மதியுங்கள். மிசோரமுக்கு பெரிய சல்யூட் என தெரிவித்துள்ளார்.
எத்தனை பொறுமை!
இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் இந்த மிசோரம் மக்களுக்கு இத்தனை பொறுமையா. டிராபிக் ரூல்ஸை மதித்தாலே கோபம் குறைந்து ரத்த அழுத்தமும் குறையுமே என்கிறார்கள். அதே நம்மூராக இருந்தால் எதிர் திசையில் நைஸாக முன்னோக்கி சென்று போலீஸாரை பார்த்தும் ஜெர்க்காகி நல்லவங்க போல் வரிசையில் நின்று விடுவர்.