பிரதமர் மோடி திட்டவட்டம்! ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி.. எந்தவொரு உலக தலைவரும் சொல்லவில்லை என விளக்கம்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்து வரும் விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை (Narendra Modi on Operation Sindoor) அளித்தார். அப்போது ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனியும் எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி எந்தவொரு உலக தலைவரும் சொல்லவில்லை என்று மோடி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் பல எம்பிக்கள் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்துப் பேசினர். இரண்டாவது நாளான இன்று காலை உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்தார்.

ராகுல் காந்தி
அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மாலை ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோதே பாகிஸ்தானிடம் அது தொடர்பாகப் பேசியது தவறு என்றும் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ராகுல் காந்தி மேலும், "இந்தியா பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை 29 முறை சொல்லிவிட்டார்.
இந்திரா காந்திக்கு இருந்த தைரியத்தில் 50 சதவீதம் பிரதமர் மோடிக்கு இருந்தால்கூட, நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று டொனால்ட் ட்ரம்ப் பொய் சொல்கிறார், அவர் எந்த சமரசத்திற்கும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்று சொல்ல வேண்டும்" என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தி பேச்சை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை அளித்தார்.
மோடி பதில்
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.. தன் மீது நம்பிக்கை வைத்துள்ள 140 கோடி மக்களுக்கு நன்றி என்று கூறிய பிரதமர் மோடி, நாட்டு மக்களின் சார்பாகவே இங்கு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் கொடுமையின் உச்சம் என்ற அவர், அதற்குப் பயங்கரவாதிகளே யோசிக்காத அளவுக்கு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் காட்டுவோம் என்ற பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றும் எப்போது, எங்குத் தாக்குதல் நடத்தலாம் என்ற முடிவை ராணுவமே எடுத்தது என்றும் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனியும் எடுபடாது என்ற அவர், இந்தியா இனியும் அதற்கெல்லாம் பயப்படாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் ஏர் பேஸ்கள் இன்னும் ஐசியுவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு உலக தலைவரும் சொல்லவில்லை
மேலும், எந்தவொரு உலக தலைவரும் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார். டிரம்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதிலும், எந்தவொரு உலக தலைவரும் இது தொடர்பாக இந்தியாவிடம் பேசவில்லை என அவர் தெரிவித்தார். மோடி மேலும் பேசுகையில், "மோதல் ஆரம்பித்த நாளில் நாங்கள் தாக்குதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாட்டோம் என்றே கூறி இருந்தோம். ஆபரேஷன் சிந்துரை நிறுத்தும்படி எந்த உலகத் தலைவரும் எங்களிடம் கூறவில்லை.
ஜேடி வான்ஸ்
மே 9ஆம் தேதி இரவு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் என்னுடன் பேச முயற்சி செய்தார். ஒரு மணி நேரம் அவர் முயன்றும், நான் ராணுவ அதிகாரிகளுடனான கூட்டத்தில் இருந்ததால் பேச முடியவில்லை. பின்னர் நான் அவரைத் திரும்ப அழைத்தபோது, பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலுக்குத் திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார். அதற்கு நான், பாகிஸ்தானின் எண்ணம் அதுவாக இருந்தால், அவர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்று பதிலளித்தேன்
மே 10ம் தேதி பாகிஸ்தானின் ராணுவ பலத்தை அழித்தோம். இதுவே எங்கள் பதிலடியாக இருந்தது. இந்தியாவின் ஒவ்வொரு பதிலடியும் முந்தையதை விட பெரியதாக இருக்கும் என்பதை இதில் தான் பாகிஸ்தானும் புரிந்து கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்பட்டால், இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும் என்பதைப் பாகிஸ்தான் தெரிந்து கொண்டது. நான் மீண்டும் சொல்கிறேன் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications