காங்கிரஸில் ஒருமுகம்.. ஊடகங்களில் இன்னொரு முகம்.. சசிதரூரை விளாசி தள்ளிய தேர்தல் பொறுப்பாளர்
டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலின்போது சசிதரூர் அணியினர் இரட்டை முகத்தை வெளிப்படுத்தினர் என தேர்தல் நடத்திய அதிகாரி மதுசூதன் மிஸ்திரி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்ந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான அக்டோபர் 17 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் குடும்ப கட்சியா? காந்தி குடும்பம் அல்லாத தலைவர்கள் இவ்ளோ பேரு இருக்காங்களே - இதோ லிஸ்ட்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
இந்த தேர்தலில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர், காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களை எம்பி மல்லிகார்ஜூன கார்கேவும் போட்டியிட்டனர். இதில் சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இருந்தது. அக்டோபர் 17 ல் நடந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரு குடும்பத்திற்கு வெளியே இருந்து ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கார்கே வெற்றி
இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகளும், சசி தரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர். மொத்தம் 412 ஓட்டுக்கள் செல்லாமல் போனது. தேர்தலில் வெற்றி பெற்ற சசிதரூர், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛காங்கிரஸ் தலைவர் பதவி மிகவும் கவுரவமானது. வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துக்கள்'' என்றார். இதற்கு நன்றி தெரிவித்த மல்லிகார்ஜூன கார்கே கட்சியை வளர்க்க சேர்ந்து பாடுபடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
முறைகேடு புகார்
இதற்கு மத்தியில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக சசிதரூரின் தேர்தல் முகவர் சல்மான் சோஸ் கடிதம் எழுதினார். மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சசிதரூர் தரப்பு குற்றம்சாட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர் மதுசூதன் மிஸ்திரி பதில் அளித்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் விவகாரத்தில் அவர் சசிதரூர் அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மதுசூதன் மிஸ்திரி கூறியதாவது:
இரட்டை முகம்
சசிதரூர் அணியின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனாலும் கூட மத்திய தேர்தல் ஆணையம் அவர்களுக்கு எதிராக சதி செய்வதாக ஊடகங்களிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பாக நான் அளித்த பதில்கள் அனைத்தும் திருப்தியாக இருப்பதாக சசிதரூர் அணியினர் எங்களிடம் கூறினார்கள். அதற்கு பின் ஊடகங்கள் முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மன்னிக்க முடியாது
சசிதரூர் அணியினர் இரட்டை முகத்தை காண்பித்துள்ளனர். எங்களிடம் ஒரு முகத்தையும், ஊடகங்கள் முன்பு இன்னொரு முகத்தையும் காட்டினர். இதனை நினைத்து வருந்துகிறேன். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியது தவறான ஆதாரங்களின் அடிப்படையிலானது. சசிதரூருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஒரு சிறு புள்ளியில் இருந்து மலையளவு பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்தனர். இது மன்னிக்க முடியாது" என்றார்.