"ஆப்ரேஷன் கங்கா!" உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்.. மகிழ்ச்சியில் ஜெய்ஹிந்த் முழக்கம்
டெல்லி: உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானம் மும்பையில் தரையிறங்கியது.
உக்ரைன் நாட்டில் கடந்த 3 நாட்களாகவே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
இதைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பு- உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என ரஷ்யா அறிவிப்பு
நடவடிக்கை
ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க உலக நாடுகள் மாற்றுவழி குறித்து ஆலோசித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வேறு வழிகளில் மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இந்திய மாணவர்கள்
உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டி இருந்தது. உக்ரைன் நாட்டில் இருந்து சாலை வழியாக ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்காக ரஷ்யா மொழி பேசும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியர்களை வெளியேற்றும் பணிகளைத் தானே நேரடியாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
மும்பை வந்தடைந்த இந்தியர்கள்
இதற்காக வெள்ளிக்கிழமை ஏற்கனவே இரு விமானங்கள் ஹங்கேரி மற்றும் ருமானியா நாடுகளுக்கு அனுப்பப்பட்டு இருந்தன. இந்தச் சூழலில் உக்ரைனில் இருந்து ருமானியா சென்ற 219 இந்தியர்களுடன் ருமேனிய தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக மும்பையில் தரையிறங்கி உள்ளது. உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரடியாக சென்று வரவேற்றார்.
அமைச்சர் பியூஷ் கோயல்
தாயகம் திரும்பிய பயணிகள் மகிழ்ச்சியில் ஜெய் ஹிந்த் முழக்கம் எழுப்பினர். இது தொடர்பான விடியோ இணையத்தில் டிர்ரெண்டிங்கில் உள்ளது தாயகம் திரும்பிய இந்தியர்களை வரவேற்பதாகத் தெரிவித்த அமைச்சர் பியூஷ் கோயல், உக்ரைனில் இருந்து பத்திரமாக அழைத்துவரப்பட்ட இந்தியர்களின் முகத்தில் புன்னகையைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் மேலும் பல மாணவர்கள் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்ரேஷன் கங்காவின் முதல் படி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
சொத்த ஊர்
அதேபோல தாயகம் திரும்பும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, உணவு என அனைத்து செலவுகளையும் ஏற்பதாகவும் தெரிவித்திருந்தார். உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட உடன், அவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.