ஆபரேஷன் சிந்தூர் நடக்கும்போதே.. இந்தியாவின் வியூகங்களை பாகிஸ்தானிடம் சொன்னது ஏன்? ராகுல் கேள்வி
டெல்லி: எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பேசினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் நடக்கும்போதே பாகிஸ்தானை தொடர்பு கொண்டு பேசியது ஏன் என்றும் இந்தியாவின் வியூகங்களை பாகிஸ்தானிடம் முன்கூட்டியே சொன்னதே விமானப்படைக்கு பின்னடைவாக அமைந்ததாகவும் ராகுல் காந்தி சாடினார்.
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகிறது. நேற்றைய தினம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கரும் நேற்றைய தினம் முக்கிய விளக்கங்களை அளித்தார். அதில் பல்வேறு கட்சிகளும் பங்கேற்று பேசி வருகிறார்கள்.

அதன்படி இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். பஹல்காமில் நடந்தது ஒரு கொடூரமான தாக்குதல் என்ற ராகுல் காந்தி, பாகிஸ்தான் அரசால் தெளிவாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இதயமற்ற தாக்குதல் இது என குறிப்பிட்டார். மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு அவையில் இருந்த அனைவரும் சேர்ந்து பாகிஸ்தானை கண்டித்தோம் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "1971 போரை ஆபரேஷன் சிந்தூர் உடன் ராஜ்நாத்சிங் ஒப்பிட்டார். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் அரசியல் தலைமையிடம் முழு துணிச்சல் இருந்தது. 1971ல் ஜெனரல் மனோக் ஷாவுக்கு அப்போதைய பிரதமர் இந்திர காந்தி முழு சுதந்திரம் அளித்தார். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தன பலனாக பாகிஸ்தான் படைகள் சரணடைந்தன. ஆனால், இப்போது நடந்ததே வேறு!
ஆபரேஷந் சிந்தூர் நடக்கும்போதே பாகிஸ்தானை தொடர்பு கொண்டதாக ராஜ்நாத் சிங் கூறினார்.. பாகிஸ்தானை தொடர்பு கொண்டு ராஜ்நாத் சிங் கூறியது அதிர்ச்சி தருகிறது.. இந்தியாவின் வியூகங்களைப் பாகிஸ்தானிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டீர்கள்.. ஆபரேஷன் சிந்தூரின்போது அரசின் செயல்பாடுகளே விமானப்படைக்கு பின்னடைவாக அமைந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications