முன்னுதாரண தீர்ப்பு.. நளினி, முருகன் உட்பட மற்ற 6 பேரும் விடுதலையாக வாய்ப்பு? அடுத்து என்ன நடக்கும்?
டெல்லி: பேரறிவாளனுடன் கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேருக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்பதால் அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

பேரறிவாளன் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், "ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு. ஆளுநர் முடிவை தாமதப்படுத்தினால், அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது" என்று தெரிவித்தது.

30 ஆண்டு சிறைக்கு முடிவு
இதன்மூலம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ளது.
ஆளுநர் கால தாமதம் செய்ததால் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142 சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

மற்ற 6 பேரும்
பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுதலையின் மூலம், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகிய மற்ற 6 பேருக்கும் விடுதலை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த முறை பேரறிவாளன் விடுதலை வழக்கு விசாரணையின்போது ரவிச்சந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாங்களும் இதில் இடைமனுதாரராக சேர்ந்துகொள்கிறோம் என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, பேரறிவாளன் விவகாரத்தில் நாங்கள் ஒரு தீர்ப்பை வழங்கிவிடுகிறோம். அந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு மற்றவர்கள் தங்கள் விடுதலையைக் கோரலாம் எனத் தெரிவித்திருந்தார்.

மற்றவர்களும் விடுதலை?
இதனால், பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பைக் கொண்டு மற்றவர்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு அவர்களது விடுதலை தொடர்பான வழக்கிலும் மேற்கோள் காட்டப்படும்.
பேரறிவாளன், சிறையின் நன்னடத்தை விதிகளைப் பின்பற்றி நடந்தது தொடர்பான விஷயங்களும் அவரது விடுதலை விவகாரத்தில் கருத்தில் கொள்ளப்பட்டது என்பதால் மற்ற 6 பேரின் விடுதலை விஷயத்திலும் அதுபோன்ற விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

நம்பிக்கை
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அனைவருக்கும், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விடுதலை தீர்ப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மற்றவர்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
எனினும், முருகன் உள்ளிட்டோர் இந்திய குடிமக்கள் இல்லை என்பதால், அவர்களுக்கு விடுதலை வழங்கப்படுவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்பது குறித்தும் சட்ட வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications