மின்வெட்டு! "எல்லா தப்பையும் செஞ்சது காங்கிரஸ்.. அப்படிதானே!" மத்திய அரசை நக்கலடிக்கும் ப.சிதம்பரம்
டெல்லி: நாட்டில் பல பகுதிகளில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே மின்வெட்டு சிக்கல் நிலவுகிறது. நாட்டில் அனல் மின் நிலையம் மூலமே அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இதனிடையே இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறை, மின் உற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் காரணமா குஜராத் தொடங்கிப் பல மாநிலங்களில் மின்வெட்டு அதிகரித்துள்ளது.

ப.சிதம்பரம்
இந்நிலையில், மின்சார பாதிப்பு விவகாரத்தில் மத்திய அரசை முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாகச் சாடி உள்ளார். இது குறித்து ப. சிதம்பரம் தனது ட்விட்டரில், "ஏராளமான நிலக்கரி, பெரிய ரயில் நெட்வொர்க், அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படாத திறன். இவை எல்லாம் இருந்தும் கடுமையான மின் பற்றாக்குறை உள்ளது. மோடி அரசைக் குறை கூற முடியாது. இதற்குக் காரணம் 60 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சிதான்!

தவறு எங்கள் மீது தான்
இதற்குக் காரணம் நிலக்கரி, ரயில்வே அல்லது மின்துறை அமைச்சகங்களில் திறமையின்மை இல்லை. குற்றம் சாட்டப்பட்ட இந்த துறைகளில் கடந்த காங்கிரஸ் அமைச்சர்களாக இருந்தவர்கள் தான் மீது தவறு உள்ளது! இதற்கு மத்திய அரசு சரியான தீர்வைக் கண்டறிந்துள்ளது: பயணிகள் ரயில்களை ரத்து செய்து, நிலக்கரி ரேக்குகளை இயக்குங்கள்!" என்று அவர் தனது ட்விட்டர் தளத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அதிகரிக்கும் மின் தேவை
கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு வெளியின் தாக்கம் நாட்டில் மிக மோசமாக உள்ளது. நாட்டில் வெப்ப அலை தொடரும் சூழலில், நாட்டின் உச்சபட்ச மின் தேவை வெள்ளிக்கிழமை 207.11 ஜிகாவாட் என்ற உச்சத்தைத் தொட்டது. இதனிடையே நாட்டில் நிலக்கரி சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், 42 பயணிகள் ரயில் சேவையை மத்திய அரசு ரத்து செய்ததுள்ளது.

எதிர்க்கட்சிகள் சாடல்
குறிப்பாக நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதிகளை உள்ளடக்கிய தென்கிழக்கு மத்திய ரயில்வே பகுதியில் மட்டும் மொத்தம் 34 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் இந்த மின்வெட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். நாட்டில் இருக்கும் அனல் மின் நிலையங்களுக்கு போதிய அளவு நிலக்கரி கிடைக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடியுள்ளது.












Click it and Unblock the Notifications