எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 20ம் தேதி வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக் கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் டிசம்பர் 20ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை.
காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது
இந்த குளிர் கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் அமளி
இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கம் போல் கூடியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்பிக்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் போராட்டத்தின்போது லக்கிம்பூரில் வாகனம் மோதி விவசாயிகள் உயிரிழப்பு சம்பவம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பதில் தருமாறு எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். மேலும் லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
3 மசோதாக்கள் நிறைவேற்றம்
பின்னர் பிற்பகலில் அவை கூடியபோது வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா உள்ளிட்ட 3 சட்ட மசோதாக்களை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பவார் தாக்கல் செய்தார். 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதாவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இருந்தாலும் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா ஒருவழியாக நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து மக்களவை நடவடிக்கைகள் 20ம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபையை நடத்திய ராஜேந்திர அகர்வால் தெரிவித்தார்.
லோக், ராஜ்யசபா ஒத்திவைப்பு
இதற்கிடையே 12 எம்.பி.க்கள் இடைநீக்கம், லக்கிம்பூர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளுடன் கூடிய பதாகைகளை ஏந்தியபடி அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் அவை நடவடிக்கை சுமூகமாக நடைபெற இரு தரப்பும் பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையை திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்க மாட்டோம்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்கிறது. அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. இடைநீக்க நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றாக வேண்டும். இதுகுறித்து ஆளும் கட்சியினர் அது குறித்து பேச தயாராக இல்லை என்று பேட்டி அளித்தார்.