நாளை தொடங்குகிறது நாடாளுமன்றம்- பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம்!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரின் முதல் நாளான நாளை, சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!
ஏற்கனவே இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு குழுவையும் அமைத்துள்ளது. இதனால் டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.
டிராக்டர் போராட்டம் ஒத்திவைப்பு
இருப்பினும் நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் மசோதா நிறைவேறும் வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில் நாடாளுமன்றம் நோக்கிய டிராக்டர்கள் பேரணியை கைவிடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.
டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்
இதனிடையே நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டம்
அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி கூட்டும் இந்த கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரஸின் இந்த முடிவு எதிர்க்கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்தி இருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் மசோதாக்கள்
மேலும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அனைத்து எம்.பிக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளன. இக்கூட்டத் தொடரில் வங்கிகளின் அரசின் பங்குகளை குறைக்க வகை செய்யும் மசோதா, கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கும் மசோதா ஆகியவையும் நிறைவேற்றப்படலாம் என்பது எதிர்பார்ப்பு.