டீ விலை ரூ.20.. அதுக்கு சர்வீஸ் சார்ஜ் ரூ.50.. கொந்தளித்த பயணிகள்! ரயில்வே கொடுத்த வினோத விளக்கம்
டெல்லி: ரயிலில் பயணி ஒருவருக்கு வெறும் டீ ஒன்றுக்கு சர்வீஸ் சார்ஜாக ரூபாய் 50 வசூலிக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
நமது நாட்டில் பொதுவாகவே பஸ் பயணங்களில் நிறுத்தப்படும் இடங்களில் உணவுகள், குளிர்பானங்களில் விலை அதிகமாக உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கும். அவ்வப்போது மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்.
ரயில்களில் இதுபோன்ற சிக்கல் இல்லாமல் இருந்தது. உணவு பொட்டலங்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றாலும் ரொம்ப அதிகமாக இருக்காது.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கடலை மிட்டாய் விற்பனை..செம டேஸ்ட் - உற்சாகத்தில் பயணிகள்
இந்தியன் ரயில்வே
இந்திய ரயில்வேயில் உணவு மற்றும் பானங்களின் விலை மானியம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்களுக்கு இந்தத் தகவல் ஷாக் தரும். சமீபத்தில் சதாப்தி ரயிலில் பயணித்த ஒருவர் தனது ரயில் பயணத்தின் போது ஒரு கப் தேநீருக்கு அவருக்கு 70 ரூபாய் பில் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா. உண்மையில் அது தான் நடந்துள்ளது.
டீ கப்
அதில் என்ன வினோதம் என்றால் ஒரு கப் டீ-இன் விலை ரூ.20 தான். ஆனால், அதற்கான சர்வீஸ் சார்ஜாக ரூ.50 வசூலிக்கப்பட்டு உள்ளது. இந்த பில்லை பார்த்ததும் கடுப்பான அந்த பயணி தான், அதை ஃபோட்டோ எடுத்து இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். இது உடனடியாக இணையத்தில் வைரலானது. பலரும் இது தொடர்பாக இந்திய ரயில்வேயை டேக் செய்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து இது தொடர்பாக இந்தியன் ரயில்வே விளக்கமும் அளித்துள்ளது,
என்ன நடந்தது
கடந்த ஜூன் 28ஆம் தேதி டெல்லி -போபால் இடையே இயங்கும் போபால் சதாப்தி ரயிலில் பயணி ஒருவர் பயணித்துள்ளார். காலை நேரத்தில் டீ குடித்த அவர் தான், அதற்கான பில்லை பார்த்து ஷாக் ஆகிவிட்டார். அந்த பில்லை பதிவிட்ட அவர், "ஒரு டீயின் விலை ரூ.20. அதற்கான ஜிஎஸ்டி ரூ.50 ஆக மொத்தம் ஒரு டீயின் விலை ரூ 70. இது ஒரு சூப்பரான கொள்ளையாக இருக்கிறது" என்று ட்வீட் செய்து இருந்தார். இதனைப் பலரும் ரிட்வீட் செய்து கேள்வி எழுப்பி வந்தனர்.
கொந்தளித்த நெட்டிசன்கள்
இருப்பினும், அந்த பில்லை பார்த்தால், அது ஜிஎஸ்டி இல்லை சர்வீஸ் சார்ஜ் என்பது புரியும். இருந்த போதிலும் , டீயை செய்ய 50 ரூபாய் எல்லாம் ரொம்ப அதிகம் என்றே பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ரயில்வே துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணிகளின் டிக்கெட் உடன் சேர்த்து, உணவையும் சேர்த்து பயணிகள் புக் செய்யலாம்
விளக்கம்
ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் சர்வீஸ் சார்ஜ் 50 ரூபாய் என பில் போடப்பட்டாலும் ஒரு ரூபாய் கூட பயணிகளிடம் இருந்து ரயில் பயணத்தில் வசூலிக்கப்படாது. ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் டிக்கெட் புக் செய்யும் போது, அவர்கள் உணவைச் சேர்க்காமல் கடைசி நேரத்தில் ரயிலில் உணவை ஆர்டர் செய்தால் மட்டுமே அவர்களுக்கு சர்வீஸ் சார்ஜாக ரூ.50 வசூலிக்கப்படும். சாதாரண டீயாக இருந்தாலும் சரி, முழு உணவாக இருந்தாலும் சரி அதே சர்வீஸ் சார்ஜ் தான்.
Recommended Video
சுற்றறிக்கை
இது தொடர்பாக ஐஆர்சிடிசி கடந்த 2018ஆம் ஆண்டே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் டிக்கெட் புக் செய்யும் போது, உணவு கண்டிப்பாக அத்துடன் இணைத்து வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், இது தொடர்பாகப் பயணிகள் அதிருப்தி தெரிவித்த பின்னரே, உணவைத் தேவைப்பட்டால் மட்டும் புக் செய்யும் ஆப்ஷன் கொண்டு வரப்பட்டது.