வெளிநாட்டு உத்தரவு.. வெளிநாட்டு பயிற்சி...பிஎஃப்.ஐ. குறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை திடுக்
டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது சரியான முடிவு என கர்நாடகா, அஸ்ஸாம் முதல்வர்கள் வரவேற்றுள்ளனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ, பி.எஃப்.ஐ) என்ற இஸ்லாமிய அமைப்பு பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையது; அரசியல் படுகொலைகளில் ஈடுபட்டது; பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்கிறது என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய அரசு இன்று தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. மேலும் அதன் முன்னணி அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பி.எப்.ஐ. இயக்கத்தினர் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் அலுவலகங்கள் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா, உ.பி, அஸ்ஸாம் மாநிலங்கள் இத்தடையை வரவேற்றுள்ளன. உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதாக், கேபி மவுரியா ஆகியோர் இது தொடர்பாக கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த முடிவு மிக சரியானது. அவருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். இந்த தடையை எதிர்ப்பவர்களை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என்றனர்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா கூறுகையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை வரவேற்கிறோம். இது மிகச் சரியான நடவடிக்கை. இத்தகைய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: நாட்டு மக்களின் மிக நீண்டநாள் கோரிக்கை இது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் ஆகியவையும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்திருந்தன.தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கட்டளைகளின்படி இந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு வெளி நாடுகளில் இருந்தும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. ஆகையால் மத்திய அரசு சரியான நேரத்தில்தான் தடை செய்துளது. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
பி.எஃப்.ஐ. தடை தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: இதுதான் புதிய இந்தியா. பயங்கரவாதிகள், கிரிமினல்கள், அவர்களின் அமைப்புகளை இந்தியா ஏற்காது. தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை நாடு ஏற்காது என்றார்.












Click it and Unblock the Notifications