"ஆப்ரேஷன் கங்கா! இந்தியா மட்டுமின்றி 18 நாட்டு மக்களை மீட்டுள்ளோம்.. " பிரதமர் மோடி" பெருமிதம்!
டெல்லி : ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தூதரக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாலியாக உரையாடினார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை ஆரம்பித்துள்ள நிலையில், இது 3ஆவது வாரமாக இன்றும் தொடர்கிறது. இந்தப் போர் காரணமாக உக்ரைன் வான்வழி மூடப்பட்டுள்ளது.
இதனால் உக்ரைனில் இருந்த மாணவர்கள் உட்பட இந்தியர்களால் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உக்ரைன் அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

இதற்காக ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுத்திருந்தது. இந்நிலையில், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் ஈடுபட்ட தூதரக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாலியாக இன்று உரையாடினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "உக்ரைனில் இருந்து 18 நாடுகளைச் சேர்ந்த மக்களை இந்தியா வெளியேற்றியது. உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் 90 டன் உதவி பொருட்களையும் இந்தியா அனுப்பி உள்ளது.
உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர அயராது உழைத்த அதிகாரிகள், தன்னார்வக் குழுக்கள், நிறுவனங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை உக்ரைனில் இருந்து சுமார் 23,000 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதுபோன்ற சூழலில் மீட்பு நடவடிக்கை என்பது கடும் சவாலானது.
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் போர் நடந்து கொண்டு இருந்த போதே உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளின் தலைவர்களுடன் நான் தொடர்ந்து பேசினேன். அவர்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications