'வரலாற்றை மறக்கக் கூடாது..' ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை.. திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: பஞ்சாப் அமிர்தசரஸில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, கடந்த கால வரலாற்றை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களையே பிரிட்டிஷ் போலீசார் நடத்தி வந்துள்ளனர். இதற்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு சம்பவங்கள் உள்ளன.
அமைதியான முறையில் போராடியவர்களை பிரிட்டஷார் எப்படிக் கையாண்டார்கள் என்பதற்கு ஜாலியன்வாலா பாக் படுகொலை சிறந்த ஒரு உதாரணம் என்று கூறலாம்,

ஜாலியன்வாலா பாக் படுகொலை
பஞ்சாபின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜாலியன்வாலா பாக் பூங்காவில் கடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரிட்டஷ் ராணுவத்தின் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டயர் என்பவர் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டார்.

நினைவுச்சின்னம்
பிரிட்டஷ் ராணுவத்தின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில் 350க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த கொடூர நிகழ்வு இந்தியச் சுதந்திர போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. ஜாலியன் வாலாபாக் படுகொலையில், உயிர்த் தியாகம் செய்த விடுதலை தியாகிகளை நினைவுகூரும் வகையில் கடந்த 1951ஆம் ஆண்டு ஜாலியன்வாலா பாக் பூங்கா தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த தியாகிகளுக்கு இந்தப்பூங்காவில் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டது.

பிரதமர் மோடி
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தை மத்திய அரசு சமீபத்தில் புதுப்பித்திருந்தது. இந்நிலையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த விழாவில் இந்த நினைவுச் சின்னத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ஆளுநர் வி.பி.சிங் பத்னூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் காணொலி மூலம் கலந்து கொண்டனர். ஜாலியன்வாலா பாக் நினைவு அறக்கட்டளை தலைவராகவும் பிரதமர் மோடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றை மறைக்கக் கூடாது
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "ஜாலியன் வாலாபாக் படுகொலை, பிரிவினை போது நிகழ்ந்த வன்முறை ஆகியவை இந்தியாவின் சுதந்திரத்திற்காகச் செய்யப்பட்ட தியாகங்களை நினைவூட்டுகிறது. இந்த சம்பவங்களை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த காலங்களில் நடைபெற்ற கொடூரங்களை நாம் புறம்தள்ளிவிடக் கூடாது. கடந்த கால வரலாற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்பது நமது பணியாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications