இரவு முழுக்க தூங்காமல் கண் விழித்த பிரதமர் மோடி.. இந்திய ராணுவ தாக்குதல் இன்ச் பை இன்சாக கண்காணிப்பு
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா கடுமையான பதிலடி தர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே தான் நள்ளிரவில் இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியுள்ளது. இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுக்க தூங்காமல் கண்காணித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பாகப் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த மாதம் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேதகிக்கப்படுகிறது.

9 இடங்களில் தாக்குதல்
இதனால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா பதிலடி தர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்தச் சூழலில் தான் இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் 5 இடங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சரியாகத் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
கண் விழித்த பிரதமர் மோடி
இதற்கிடையே இந்திய ராணுவத்தின் இந்தத் தாக்குதலை டெல்லியில் பிரமதர் மோடி தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள், மூத்த உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் களத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களைப் பிரதமர் மோடிக்குப் பகிர்ந்து வந்துள்ளனர். மேலும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உடனுக்குடன் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்த தகவல்களைப் பிரதமர் மோடிக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
தொடர் ஆலோசனை
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, தாக்குதல் நடப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாகப் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதாவது இரவு முழுக்க பிரதமர் மோடி கண் விழித்து இந்த நடவடிக்கை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வந்துள்ளார். பிரதமர் மோடிக்கு உடனுக்குடன் அனைத்து அப்டேட்களும் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவம்
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு உளவுத் துறையிடம் இருந்து தேவையான தகவல்களைப் பெற்றே ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி முப்படைகளின் தளபதிகளுடன் தொடர்ச்சியாகப் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தார். இந்தக் கூட்டங்களில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தே ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா
முன்னதாக தாக்குதலைத் தொடர்ந்து அதிகாலை 1:44 மணிக்கு இந்திய ராணுவம் வெளியிட்டிருந்த அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ராணுவம் கூறியிருந்தது.
மேலும், இந்தத் தாக்குதல் குறித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா விளக்கமளித்துள்ளது. தீவிரவாத இலக்குகளை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications