3 லட்சத்தில் எப்படி தொழில் தொடங்க முடியும்..மோடியின் முத்ரா திட்டம் நடைமுறையில் பயனற்றது-ப சிதம்பரம்
டெல்லி: பிரதமர் மோடி தொடங்கி வைத்த முத்ரா யோஜனா திட்டமானது, 'தொழில்களை ஊக்கப்படுத்த நடைமுறையில் பயனற்றது' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற பெயரில் கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை கொண்டு வந்தது.
ஏழை எளிய மக்கள் தாங்கள் சொந்தமாக சுய தொழில் தொடங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், இத்திட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ப சிதம்பரம் டுவிட் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நடைமுறையில் பயனற்றது
முத்ரா கடன் திட்டமானது தொழில்களை ஊக்கப்படுத்த நடைமுறையில் பயனற்றது என்று நான் நீண்ட காலமாகவே கூறிவருகிறேன். முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு - புதுவை மண்டலத்தில் 2021-22 ஆம் ஆண்டு 26,750 பயனாளிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி பெருமைப் படுகிறது. கணக்கிட்டு பார்க்கும் வரையில் இது மிகப்பெரிய எண்களாக தெரிகிறது.

ரூ. 3.73 லட்சத்திற்கு
சராசரியாக கணக்கிட்டால் 26,750 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை அளவு ரூ.3.73 லட்சமாக உள்ளது. ரூ. 3.73 லட்சத்திற்கு புதிதாக என்ன தொழில் தொடங்க முடியும்? ரூ. 3.73 லட்சத்தின் மூலம் எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். முத்ரா கடன் திட்டத்தின் கீழ் NPA விகிதம் அதிகமாக இருப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

முத்ரா யோஜனா
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்று அழைக்கப்படும் முத்ரா கடன் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு அதிக கெடுபிடிகள் எதுவும் காட்டாமல் ரூ. 10 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது.

3 வகையான கடன்கள்
சிறு வணிகங்கள், சேவை, உற்பத்தி, சிறு தொழிகள் செய்வோர் இதனால் பலன் பெற முடியும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகிறது. சிஷூ என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் ரூ. 50,000 வரையும், கிஷோர் என்ற பெயரில் ரூ. 5 லட்சம் வரையும், தருண் என்ற பெயரில் ரூ. 10 லட்சம் வரையும் கடன்கள் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications