கேரளா நிலச்சரிவு: உயிரிழந்தோருக்கு மோடி, ராகுல் இரங்கல்- பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்!
டெல்லி: கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியாகி உள்ளனர். கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தொர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் உறுதி அளித்தார். இதேபோல வயநாடு தொகுதி முன்னாள் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மலைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரு பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலை கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி இருப்பதால் பதற்றம் நிலவுகிறது.

நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்பு பணி முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கோவை சூலூர் விமானப் படை விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வயநாடு பகுதியில் அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
மேலும் கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு முழு உதவியை வழங்கும் என உறுதி அளித்தார் நரேந்திர மோடி. மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்; படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். வயநாடு ஆட்சியரையும் தொடர்பு கொண்டு மீட்பு பணி நிலவரங்களை ராகுல் காந்தி கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications