டீக்கடை மாஸ்டர் டூ ராஷ்டிரபதி பவன்.. சொல்லி வைத்து வென்று காட்டிய பிரதமர் மோடி
2-வது முறையாக நாட்டின் பிரதமரானார் நரேந்திர மோடி
Recommended Video
டெல்லி: பொழுது விடிஞ்சதும் ஓடிவந்து டீக்கடையை சுத்தம் செய்றதுதான் இந்த சிறுவனுக்கு முதல் வேலை.. ஆயிரக்கணக்கானோர் நடமாடும் அந்த ரயில்வே ஸ்டேஷனில் 15 வயது சிறுவனின் ஓட்டத்தையும், உழைப்பையும், யாரும் அறிந்திருக்க நியாயமில்லை.. 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஹிமாச்சல மலைப்பகுதிகளை விழிபிதுங்க சுற்றி திரிந்த சிறுவனை யாரும் திரும்பி கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை.. அவர்தான் இன்று உலகமே அண்ணாந்து பார்க்கும் நரேந்திர மோடி!
அன்றைய நிலை வேறு.. இன்றைய நிலை வேறு.. விஸ்வரூபமாக உயர்ந்து நிற்கிறார் நரேந்திர மோடி! பாஜக என்ற கட்சியை இந்தியாவே சரியாக அறியாதபோது, தொண்டனாக தன்னை 34 வருஷங்களுக்கு முன்பு மோடி தன்னை இணைத்து கொண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!
1967-ல் அவருக்கு பிடிக்காமலேயே ஒரு கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்கள். அதனால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதற்கு பிறகுதான் கட்சியில் வேகமாக செயல்பட துவங்கினார்.
பொறுப்புகள்
1971-ல்தான் ஆர்எஸ்எஸ்-ல் அவரது பணிகள் வேகம் எடுத்தன. ஆனால் பொறுப்புகள் வந்து சேர்ந்ததோ 1985-ல்தான்! 2001-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். பாஜகவின் பொதுச்செயலாளர், உடனே மாநில முதல்வர் என அந்தஸ்துகளும், பதவிகளும் விறுவிறுவென உயர்ந்தன.
குஜராத்
கடுமையான உழைப்பால் தன்னை மெருகேற்றி கொண்டதன் பலனை கட்சியில் மெதுவாக அனுபவிக்க தொடங்கினார் மோடி. அதன் பலனை கொஞ்சம் கொஞ்சமாக ருசிக்க தொடங்கினார். அதே குஜராத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். இதற்கு சாட்சிதான் பல டீக்கடைகளுக்கு நமோ டீக்கடை என்று அவரால் சுண்டி இழுக்கப்பட்டவர்கள் பெயர் வைத்தார்கள்.
இந்திரா காந்தி
ஆனால் 2014-ல் புதிய சக்தியாக மோடி உருவெடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எங்கோ மூலையில் ஒட்டிக் கொண்டு கிடந்த பாஜக என்ற கட்சியை நாடெங்கும் உச்சரிக்க வைத்தார், உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றார்! இதற்கு முன்பு பண்டித நேரு, இந்திரா காந்தியே உலக அளவில் புகழ்வாய்ந்த் தலைவர்களாக விளங்கினார்கள். இதற்கு அடுத்து மோடி என்று ஆனது! நேருவின் பாணியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியை ரேடியோவில் பேசி மக்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி கொண்டார்.
கறைகள்
141 நாட்கள் வெளிநாட்டில் தங்கி இருந்ததுடன், 49 நாடுகளுக்கும் சென்றுள்ளார் இந்த சர்ச்சைகளின் நாயகன் மோடி. அதிரடி அறிவிப்புகளால் மக்களை நிலைகுலைய வைத்தவர் என்ற அடையாளத்தையும் சுமந்துள்ளார். அதீத இந்துத்துவா கொள்கை, சிறுபான்மையினர் நசுக்கப்படுதல், விவசாயிகள் நலன் பாதிப்பு போன்றவை மோடியின் உயரத்தை கீழே இறக்கக்கூடிய சமாச்சாரங்களாக கறைபடிந்தே உள்ளன.
சாதனை
ஆனால் யார் எவ்வளவு திட்டினாலும் அதை ஆத்திரம், ஆவேசத்தால் அணுகாதவர். உச்சபச்சமாக முகம் வெளிறி காணப்படும். அவ்வளவுதான்.. மற்றபடி எப்போதுமே ஒரு ஸ்மைல்தான்.. ஒருவித நாகரீக அரசியல்வாதியாகவே தன்னை எப்போதும் முன்னிறுத்தி கொண்டார். எந்த தருணத்திலும் ஏழைத்தாயின் மகன் என்பதை உருகி உருகி சொல்ல தயங்கியதே இல்லை. அந்த ஏழைத்தாயின் மகன் இன்று 15-வது பிரதமராக உயர்ந்துள்ளது அழிக்க முடியாத சரித்திரமே!