பட்ஜெட் எப்படி இருக்கு... தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
டெல்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
2021-22 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக இந்த முறை, காகிதம் இன்றி, டிஜிட்டல் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். இதனால் பட்ஜெட் உரையின் நேரம் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களாக குறைந்தது.
இந்த பட்ஜெட் எப்படி இருந்தது, யாருக்கு பலன், யாருக்கு சாதகம் என்பது பற்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். யார் யார் என்ன சொன்னார்கள் என்பதன் விபரம் இதோ...
பிரதமர் மோடி :
சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னோடியாக அமைக்க மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
திமுக
இது பட்ஜெட் இல்லை. வெறும் எண்ணிக்கை மட்டும் தான்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் :
இது போன்ற பட்ஜெட்டை மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சூப்பர் பட்ஜெட். பல்வேறு தொகுப்புக்களை உள்ளடக்கிய 5 மினி பட்ஜெட்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி :
ஒவ்வொரு நாடும் ஒரு காலத்தில் எழும், ஒரு காலத்தில் விழும். நேரு சிறந்த நாட்டை உருவாக்கினார். பொதுத்துறையும் வேண்டும், தனியார் துறையும் வேண்டும். இத்தகைய கலப்பு பொருளாதாரத்தை நேரு உருவாக்கினார். மத்திய அரசு பொதுத்துறையை அழிக்க நினைக்கிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பொதுத்துறையை நசுக்க நினைப்பது நல்லதல்ல.
காங்கிரஸ் எம்பி., சசிதரூர் :
நான் உங்கள் வாகன பிரேக்குகளை சரி செய்ய முடியவில்லை. அதனால் உங்கள் வாகனத்தின் ஹாரனை இன்னும் சத்தம் கூட்டியுள்ளேன் என்று கூறும் கேர்ஜ் மெக்கானிக்கை எனக்கு நினைவூட்டுகிறது இந்த பாஜக அரசு.
காங்கிரஸ் ஏ.ஆர்.சவுத்ரி :
அசாதாரணமாக சூழலில் இது போன்ற பட்ஜெட்டை எதிர்பார்க்கவில்லை. அரசு தன்னை காப்பாற்றிக் கொள்ள தனியாரை தேடி செல்கிறது. சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் ஓட்டுக்களை கவரவே இந்த பட்ஜெட். ஏழை மக்களுக்கு உதவுவதாக இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்த்தோம். அரசு நாட்டை விற்க சிந்தித்து கொண்டிருக்கிறது.
மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் :
நிதியமைச்சர் தனது உரையில் 6 தூண்களை குறிப்பிட்டார். அதன் முதல் தூணான சுகாதாரத்துறையை மேம்படுத்த 137 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உ.பி.,முதல்வர் யோகி ஆதித்யநாத் :
கோவிட் 19 பேரிடர் காலத்தில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு எனது நன்றி. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பிற்காக கொண்டு வரப்பட்டுள்ள அறிவிப்புக்களும் பாராட்ட தகுந்தது.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் குறித்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து கருத்து கூறுவதாக தெரிவித்துள்ளார்.