22 ராணுவ வீரர்கள் வீர மரணம்: ''வீரர்களின் தியாகத்தை தேசம் மறக்காது''.. குடியரசுத் தலைவர் இரங்கல்!
டெல்லி: சத்தீஸ்காரில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கரின் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா உள்ளிட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். அங்கு நாசவேலையில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை சிறப்பு பாதுகாப்பு படையினர் ஒடுக்கி வருகின்றனர். இந்த நிலையில் சுக்மா மற்றும் பிஜாப்பூர் எலலைப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். நமது வீரர்களும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். ஆனால் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் மாவோயிஸ்டுகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வீரர்களின் வீர மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறுகையில், ' சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையின்போது, பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த தேசம் இந்த வேதனையை பகிர்ந்து கொள்கிறது. வீரர்களின் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது; என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications