9,500கி எடை, 6.5மீ உயரம்.. வெண்கலத்தில் கம்பீரமாக நிற்கும் தேசிய சின்னம்.. பிரதமர் மோடி திறப்பு!
டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கலத்தினால் ஆன 9,500 கிலோ எடை கொண்ட தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
தலைநகர் டெல்லி என்று கூறினாலே, மக்கள் அனைவருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் தான் மட்டுமே முதலில் நினைவுக்கு வரும். 1927ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் சூழலில், இடப் பற்றாக்குறையை காரணமாக வைத்து ரூ.971 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. அரசியல் சட்ட அரங்கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும். லோக்சபாவில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் அமையும் வகையில் கட்டப்படுகிறது.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் 10ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முக்கோண வடிவில் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
வேகமாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலத்தினாலான தேசியச் சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். வெண்கலத்தினால் செய்யப்பட்ட தேசிய சின்னத்தின் ஒட்டுமொத்த எடை 9,500 கிலோ ஆகும். இது 6.5 மீட்டர் உயரம் கொண்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேல் பகுதியில் இந்த தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைய மண்டபத்தின் மேல் அமைந்திருக்கும் இந்த தேசிய சின்னத்தின் உருவாக்கம், மண்ணால் மாதிரி உருவாக்கம், கணினியில் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கம் என 8 படி நிலைகளுக்குப் பின் வெண்கலத்தில் செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.