பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடி : ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு
டெல்லி: பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடிகள் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால் அப்பகுதியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டு இருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்பாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. இதையடுத்து பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும் எனவும் மாற்று பயணத்திற்காக பிரதமர் சாலை வழியாக செல்ல நேரும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் எனக் கூறினர்.
இந்நிலையில் முதல்வரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விளக்கம் அளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தங்கள் மீது தவறு இல்லை எனவும் இது பாஜகவின் திட்டமிடப்பட்ட செயல் என கூறியுள்ளார். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழு இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் எனவும் குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளர் பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications