இமாச்சலில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்.. பிரியங்கா காந்தியின் முதல் அரசியல் வெற்றி.. என்ன வியூகம்?
டெல்லி: இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் பாஜகவை பின்னுக்கு தள்ளிய பெருமை பிரியங்கா காந்தியையே சாரும் என கதர் தொண்டர்கள் காலரை தூக்கிவிட்டு கொள்கிறார்கள்.
1971 ஆம் ஆண்டு இமாச்சல் மாநிலம் உருவானதிலிருந்தே அங்கு காங்கிரஸ் அல்லது பாஜகதான் ஆட்சியில் இருந்துள்ளன. இமாச்சலில் ஆம் ஆத்மி மும்முனை போட்டி தயாராக இருந்த போதிலும் மக்கள் மனங்களில் காங்கிரஸும் பாஜகவுமே நிலை உள்ளதால் ஆம் ஆத்மி இமாச்சலில் அந்த அளவுக்கு மெனக்கெடவில்லை என்றே சொல்லலாம்.
காங்கிரஸை சேர்ந்த விதர்பா சிங் 21 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். இருந்தும் இடையில் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியை பறி கொடுத்தது. இந்த நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 12 ஆம் தேதி நடந்து முடிந்தது.

வாக்கு எண்ணிக்கை
இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. ஏற்கெனவே பஞ்சாப், உத்தரகாண்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என முனைப்புடன் இருந்தனர்.

இமாச்சல் பிரதேசம்
அந்த வகையில் இமாச்சல் பிரதேசத்தில் தனது பிரச்சார யுத்தியை கையில் எடுத்தவர் பிரியங்கா காந்தி. இவர் உ.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இமாச்சலில் நடந்த பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா இங்கு 5 ஆண்டுகளில் பாஜக எந்த வளர்ச்சியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

கொரோனா
கொரோனா காலத்தால் வருவாயை இழந்துள்ள இமாச்சலில் வருமானத்தை பெருக்க எந்த ஆக்கப்பூர்வமான செயல்கள் எதுவும் செய்யவில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் விஜய் ஆசிர்வாத் என்ற பெயரில் பிரியங்கா காந்தி மேற்கொண்ட பேரணிகளே இமாச்சல் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

பாட்டி இந்திரா
உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தனது பாட்டி இந்திரா காந்தியை போல் காங்கிரஸ் கட்சியை தூக்கி பிடிப்பார் என கட்சி நிர்வாகிகள் காத்திருந்த போது அவர்களுக்கு அதிர்ச்சியே ஏற்பட்டது.

இமாச்சலில் பிரச்சார வியூகம்
இந்த நிலையில் இமாச்சலில் தனது பிரசார வியூகத்தை பிரியங்கா காந்தி மாற்றினார். அதன்படி இந்த முறை அந்த மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இந்த வெற்றி ஒரு வகையில் பிரியங்கா காந்தியின் அரசியல் பயணத்தின் வெற்றியாகும். இதே போல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து அதளபாதாளத்தில் இருக்கும் கட்சியை மீட்டு இந்திராவின் பேத்தி எதையும் சாதிப்பார் என நிரூபிப்பாரா.












Click it and Unblock the Notifications