நுபுர் சர்மா தலையை துண்டித்தால் வீடு, நிலம் பரிசு! வீடியோ வெளியிட்ட அஜ்மீர் நபருக்கு போலீஸ் வலை
டெல்லி: இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்போருக்கு எனது வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை பரிசாக வழங்குவேன் என ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நபர் வீடியோ வெளியிட்ட நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நுபுர் சர்மா பேசினார். இதையடுத்து அவர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கறி சாப்பிட்டு மதுவை ஏற்கும் தெய்வம் தான் காளி.. லீனாவிற்கு திரிணாமுல் எம்பி மொய்த்ரா சப்போர்ட்
வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பான புகாரால் அவர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நுபுர் சர்மாவுக்கு நீதிமன்றம் கண்டிப்பு
இந்நிலையில் நுபுர் சர்மா விஷயத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றனர். தனக்கு மிரட்டல் இருப்பதால் தன்மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் நுபுர் சர்மா மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‛‛நுபுர் சர்மாவின் பொறப்பற்ற பேச்சால் இந்த நாடு பற்றி எரிகிறது நுபுர் சர்மா தனது கருத்துகளை காலம் தாழ்த்தி வாபஸ் பெற்றுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் கூறுகிறார். அவரால் தான் இந்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கோர வேண்டும்'' என கடுமையாக விமர்சித்தது.
தலைமை துண்டிப்போருக்கு பரிசு
இந்நிலையில் தான் நுபுர் சர்மாவின் தலையை வெட்டுவோருக்கு தனது தனது வீடு மற்றும் சொத்துக்களை பரிசாக வழங்குவதாக அஜ்மீர் பகுதியை சேர்ந்த சல்மான் சிஷ்டி என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: ‛‛குவாஜா சாஹேப் மற்றும் முகமது சாஹேப் ஆகியோரின் பெருமைக்கு பாஜகவின் நுபுர் சர்மா களங்கம் விளைவித்து அவதூறாக பேசியுள்ளார். இவரின் தலையை கொண்டுவருபவருக்கு நான் எனது வீட்டையும் நிலச் சொத்துகளையும் கொடுப்பேன். நாடு முழுவதும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள்" என கூறியுள்ளார்.
விரைவில் கைது
தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விகாஸ் சங்வான் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "இந்த வீடியோ தொடர்பாக போலீஸ் நிர்வாகத்தின் அணுகுமுறை மிகவும் கண்டிப்பானது. வீடியோவில் சல்மான் சிஷ்டி போதையில் உள்ளார். இதுதொடர்பாக, தர்கா மற்றும் அஞ்சுமான் அதிகாரிகளிடமும் போலீசார் பேசி உள்ளனர். சல்மான் சிஷ்டி தர்கா காவல் நிலைய பகுதியில் வசிக்கிறார். அவரை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்வோம்'' என கூறப்பட்டுள்ளது.
ஆதரவு தெரிவித்த 2 பேர் கொலை
முன்னதாக நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்த பதிவிட்டதாக கடந்த மாதம் இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்த கண்ணையாலால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவருக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த மெடிக்கல் கடைக்காரரான உமேஷ் பிரஹலாத்ராவ் என்பவரும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குகள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.